Snapjudge

Posts Tagged ‘OIG’

10 Most Popular & All time Favorite Tamil Writers

In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப

    • இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
    • தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
    • என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
    • தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
    • ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
      1. சுஜாதா
      2. ரமணி சந்திரன்
      3. கல்கி
      4. மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
      5. சாண்டில்யன்
      6. ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
      7. பாலகுமாரன்
      8. ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
      9. வைரமுத்து / வாலி
      10. தி. ஜானகிராமன்

      Top 10 Lingo used in 90s Engineering Colleges

      In India, Life, Lists on ஓகஸ்ட் 5, 2009 at 4:20 பிப

      Source: What Junta Uses :: what the numerous IIT slangs mean?

      1. Froot – Anyone who does downright stupid stuff.
      2. Stud – A person who rarely/never does frooty things.
      3. Despo – One of those (moronic) guys who take acads seriously.
      4. Peace – A piece of cake! Also Peaceful.
      5. Cat – Someone who doesn’t need to be a despo, and still peacefully cashes.
      6. Bogs – Venue of thought. The toilet. Abbr for Bathrooms of Graduate Students.
      7. Arbit – Anything an IITian can’t understand. Abbr. Arb
      8. Junta – A zoo of IITians.
      9. Hajaar – A cageful of them.
      10. Pondy – An educational substitute for the opposite sex.

      13 picks from 13 of Rangabashyam & Co: Best of Family Masks

      In Blogs, Literature, Misc, Politics, Religions on ஜூலை 21, 2009 at 10:38 பிப

      1. சர்க்கஸ் வளையாபதி

      எல்லோருக்கும் வணக்கம். நான் இணையத்துக்குப் புதுசு. என் பேர்
      சர்க்கஸ் வளையாபதி. இப்பத்தான் டெலிபோன் கன்னெக்ஷனுக்கு ஆர்டர் பண்ணியிருக்கேன். வந்ததும், நம்பர், மத்தத் தகவல் எல்லாம் சத்தியமாத் தர்றேன். கொஞ்சநாள் பொறுத்துக்குங்க.

      இப்பத்தான் எனக்கு நியூஸ் வந்தது. ரங்கபாஷ்யம் இங்கேயும் வந்துட்டான்னு. அதுக்குத்தான் அவனப்பத்தி ஒங்களுக்கு ரெண்டு வார்த்தை சொல்லிட்டுப் போகலாமுன்னு வேகமா வந்தேன்.

      ரங்கபாஷ்யம் நீங்க நெனக்கிற மாதிரி ஆளு ஒண்ணும் இல்ல. அவன் ஒரு சுத்த ஃப்ராடு. நம்பர் ஒண்ணு பித்தலாட்டம். ஆனா வேணி மாமி அப்படியில்ல. பத்தர மாத்துத் தங்கம். எது கேட்டாலும் தயங்காமக் கொடுத்துடும்.

      ரங்கபாஷ்யத்தை சின்ன வயசிலிருந்தே நல்லாத் தெரியும். அவன் பாணியிலே சொல்லனும்னா, பால்ய சிநேகிதன். ஆனா, அண்டப் புளுகன்.

      நாங்கள்ளாம் சேர்ந்துதான் வளந்தோம், வெளயாடுனோம். நானு, அவன், அமிர்தராஜு (அதான், நம்ம விஜய்யோட அப்பா) மூணு பேரும் எப்பவும் சேர்ந்துதான் தண்ணி போடுவோம். ரங்கபாஷ்யம் மகாகஞ்சன். பாட்டில் வாங்கவோ, இல்லே பட்டாணி வாங்கவோ என்னிக்கும் அவங்கிட்ட இருந்து ஒரு பைசா லேசுலே பெரளாது. மிலிட்டரி ஹோட்டல்ல நல்லா மட்டன் பிரியாணி, சிக்கன் சுக்கா எல்லாம் மூக்கு முட்ட திம்பான், வெளியிலே வந்து, வெங்காயம் கூட சாப்பிடாத வெஜிடேரியன்னு புருடா விடுவான்.

      அவங்க தாத்தா மைசூர் மகாராஜா சமஸ்தானத்தில முக்கிய மந்திரியா இருந்தாரு, பெரிய சாஸ்திரி, அப்படி இப்படியின்னு சும்மா பீத்திக்கிட்டிருப்பான்.

      அவருக்கு ‘வெளிக்குப்’ போறதுல எப்பவும் கொஞ்சச் சிக்கல். அதனால, சமஸ்தானத்தில ‘முக்கிய’ ஆளா இருந்திருக்கிறார்.

      நெஜம்மாவே அவர் ஒண்ணும் மந்திரியா எல்லாம் இருந்ததில்லை. மகாராஜா அரண்மனை சமயக்கட்டுலே, சரக்குமாஸ்டரா இருந்திருக்கிறாரு. அம்புட்டுத்தேன். மகாராஜாவுக்கு நல்லா தக்காளி சூப்பும், பருப்பு ரசமும் மணமா வச்சுக்குடுப்பாரு, மத்த எடுபிடி வேல செய்வாரு.

      வேற ஒண்ணும் பீத்திக்கிற மாதிரி எதுவும் கிடையாது.

      சின்ன வயசுல்லேர்ந்தே சரியான ஊனக் குசும்பன். இவன் போற இடமெல்லாம், இவனை எல்லோரும் குரங்கு பாஷ்யம், கல்லுளி மங்க பாஷ்யம் இப்படித்தான் கூப்பிடுவாங்க. ரொம்ப மண்டக்கர்வம் வேறே. யாரோடயும் அனுசரிச்சுப் போகமாட்டான். நான் அப்படியில்லை. வளையாபதின்னாலே ரொம்ப flexible டைப்புன்னு எல்லாருக்கும் தெரியும்.

      சும்மாக் கெடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கிற ஆண்டிப்பண்டாரம் வேறு யாரும் இல்ல, இவந்தான். பல்கலைக்கழகம்னு சொல்லித்தான் மொதல்லே உள்ளே பூவான். அப்புறம் என்னதான் நடக்குதுன்னு ஒங்களுக்கு பிடிபடறதுக்குள்ளே, பல்கலைக் ‘கலகமா’ மாத்திடுவ்வான். நாரத கான கலக சிரோமணின்னு இவனுக்கு ஒரு பட்டமே இருக்கு. இவன் இங்கே வந்ததிலிருந்து எவ்ளோ பிரச்னை பாருங்க. நீங்க எல்லாம் ஒரு குடும்பம்னு சொல்லி அனுசரிச்சுப் போயிட்டு இருந்தீங்க. இப்போ இவன் வந்து எல்லோருக்கும் சிண்டு முடிச்சி கலாட்டா பண்ணி, இப்போ எல்லோரும் வரிஞ்சிக் கட்டிக்கிட்டு நிக்குறீங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சும்மாவா சொன்னாங்க.

      நான்லாம் ரிட்டையர்டு ஆகிட்டு மருவாதிக் காப்பாத்திட்டு இருக்கலியா? இப்படியா ஊனக் குசும்பு பண்ணிட்டு இருக்கேன். எனக்கென்னமோ, சொல்லவேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். குரங்கு பாஷ்யம் லேசுப்பட்ட பேர்வழி இல்ல. ஜாக்ரதயா இருங்க.

      ஆம புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாதுன்னு சொல்வாங்க. இந்த கல்லுளி மங்க பாஷ்யம் ஆமையையும், அமீனாவையுமே சாப்பிட்டுப்போட்டு ஏப்பம் விடற காண்டாமிருகம். இந்தக் காண்டாமிருகம் திரும்பி வந்தா, மிரண்டு போகாம, ஏண்டா வந்தேன்னு அடிச்சு வெரட்டுங்க. ஆமா, போண்டாவாக்கி சாப்பிட்டுருங்க.

      எப்பவும் அனுசரிச்சுப் போகும்,

      அன்பன் வளையாபதி , மார்ச்சு 20, 1999


      2. மணி சுவாமிநாதன்

      சுகமே, சுகமா?

      வெங்காயம் என்றாலே எனக்கு அலர்ஜி. வெங்காயத்தை சமையலில் இருந்தே பூண்டோடு ஒழித்துவிட்ட எனக்கு, இதற்கு மேலும் பெரியாரை பற்றி உம்முடன் விவாதித்து பொழுதைப் போக்க எனக்கு நாட்டம் இல்லை. பெரியார் ஒரு முடிந்த சகாப்தம். இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு.

      மகாலட்சுமியை வருடினா, மடோனா அம்மணமாக வருகிறார்கள் என்று தாங்கள் கூறுவதிலிருந்து பலருடைய மனதை தாங்கள் புண்படுத்தி இருக்கின்றீர்கள். நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை அள்ளித்தந்திடும் திருமகளாம் மகாலட்சுமியை ‘வருடுவது’ என்று விகற்பமாக கூறியிருக்கிறீர்கள். இதன்மூலம் கோடானுகோடி இந்துமித்திரர்களின் உணர்வுகளைக் கொதிக்க வைத்துவிட்டீர்கள். இதே இது, மற்ற மதக் கடவுள்களைத் தாங்கள் சொல்லியிருப்பீன் உங்களை சிலுவையிலோ, கழுவிலோ ஏற்றியிருப்பார்கள். உங்களது பொறுப்பற்ற செயலைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் ஏற்பட்டால், நான் அதற்கு பொறுப்பல்ல. நீர்தான் மூலகாரணம்.

      மடோனாவை அம்மணமாகப் பார்க்கலாம் என்று கேவலமாகப் பேசியுள்ளீர்கள். செல்வி மடோனா தமிழ்நங்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனித இனத்துக்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்றான சிருங்கார ரசத்தை, சிணுங்காமல் வழங்கிவரும் திருமதி மடோனா போன்றவர்கள், தாய்க்குலத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்.

      செல்வி மடோனாவை அம்மணமாக பார்க்கும்போது கூட, அன்னை பராசக்தியை பார்க்கும் பாரம்பரியத்தினர் இந்து நண்பர்கள். பரத்தையர் குலம் உயர்ந்த குலம் என்று கருதும் சிலம்புச்செல்வர்கள் நிரம்பிய இணையம் இது. தாங்கள் ஒரு ஆணாதிக்கவாதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாய்க்குலத்தை அவதூறாகப் பேசுவதற்கு இணையம் உகந்த இடமன்று.

      ‘அட மின் வருடிங்க அய்யங்காரே’ என்ற உங்களது கூற்றில் தொனிக்கும் இளக்காரத்தை ஆட்சேபிக்கிறேன். அந்தணர்களுக்கு மரியாதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், மகாலட்சுமி – மடோனா – அம்மணம் – வருடுவது – அய்யங்கார் என்று வேண்டுமென்றே சங்கிலித்தொடர் போல அமைத்து நக்கல்செய்வது உங்களைப் போல படித்தவர்களுக்கு அழகல்ல. மனித இனம் இவ்வளவு தூரம் முன்னேறி வருவதற்கு காரணம் கல்விதான். ‘எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று படித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நமது சாஸ்திரங்களை இத்தனை காலமாக பேணிக்காத்து, தமிழர்கள் இன்று உலக அரங்கில் வெற்றிநடை போட வைத்த எங்களுக்கு தாங்கள் நன்றி பாராட்டும் விதம் இதுதானா? நன்றி மறப்பது நன்றன்று!

      என்னைக் கையெடுத்துக் கும்பிடுங்கள் என்று இதுவரை நான் உங்களிடம் கேட்டதில்லை. என்னை ஒரு சக மனிதனாக நினைக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கேட்கிறேன். இல்லாவிட்டால், மீண்டும் பழையபடி கற்காலத்துக்கே செல்ல நேரிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள். ஆனால், ஒன்று மாத்திரம் உறுதியாகச் சொல்லுகிறேன். தமிழனின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதை விட்டுவிட்டு, ‘பார்ப்பனன் – பார்ப்பனன் அல்லாதவன்’ என்று குறுகியநோக்கு வட்டத்துக்குள்ளேயே காலமெல்லாம் கும்மியடிக்கும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன்.

      ஆனால், சிறியவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் பெரியவர்கள் மன்னிப்பது சம்பிரதாயம். அதன்படியே பெரியார் ரங்கபாஷ்யம் அவர்கள் தாங்கள் செய்த குற்றங்களை எல்லாம் மன்னித்துவிட்டு, உங்களுடன் பரிவுடன் ஸ்நேகம் செய்ய இஷ்டப்படுகின்றார் என்பது தங்களுக்குத் தெரியும். தேடிவந்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை தக்கவைத்துக் கொள்ளுவதுதான் விவேகம்.

      இன்னுமொரு விசயம். நண்பர் சுலைமானுக்கு அமீரக நாட்டு நண்பர்கள் மத்தியில் மரியாதையும் செல்வாக்கும் உள்ளதாகத் தெரிகிறது. ஜாதிமத பேதங்களைக் கடந்து உறுப்பினர்கள் அவரது சொல்லுக்குக் கட்டுப்படுகின்றார்கள் என்றால், இவர் ஏதோ காட்ஃபாதர் மாதிரித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றார் என்று நினைக்கிறேன். நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

      சுலைமான் விசுவாசிகள் எல்லோரையும் மொத்தமாக, பெரியார் ரங்கபாஷ்யம் கூட்டணிக்கு கொண்டுவரும் திருப்பணியில், ராமபிரானுக்கு அணில் ஓடி ஓடிச்சென்று உதவியதுபோல, தாங்களும் முடிந்ததைச் செய்யவேணும். சுலைமான் உங்கள் மேல் பாசம் வைத்திருக்கின்றார் என்பதனை இணைய நாட்டில் எல்லோரும் அறிவர். இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் அவரிடம் தூது செல்ல வேண்டுகிறேன். தேவைப்பட்டால், நானும் சூட்கேசுடன் வருகிறேன்.

      அந்த புண்ணிய பூமி அமீரக நாடுகளிலும் கூட, ஆசிப் மீரான், பரமேஸ்வரன், அரசு, பயசுன்னு சில முரண்டு ஆசாமிகள் இருப்பதாக தகவல் வருகின்றது. அவர்கள் நமது கேம்ப்புக்கு வந்தாலும், உட்கட்சி பூசல், ரகளை போன்ற வம்புதான். அவர்கள் டாக்டர் தத்துவராயர் லோகநாதன் கூட்டணிக்கே சென்றுவிட செய்வோம். அங்கே போனால், தத்துவராயருடன் குரங்குகள் ஏற்றுமதி, இறக்குமதி விளையாட்டுக்களில் மெய்மறந்து நம்மை நிம்மதியாக ஆளவிடுவார்கள்.

      டெல்லி சென்றுள்ள பெரியார் ரங்கபாஷ்யம் அவர்கள் இரண்டு நாட்களில் திரும்பிவிடுவார். வந்தவுடன் ஒரு சமபந்தி போஜனம் நடத்துவதற்கு அவசரமாக ஆட்களைச் சேகரிக்க உதவுவீர்கள் என நம்புகிறேன். பெரியார் விசுவாசியான தங்களுக்கு, பெரியாரின் வாரிசு ரங்கபாஷ்யம் அவர்களை சந்தோசப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

      அன்புள்ள
      மணி சுவாமிநாதன்


      3. Story of Ramanujar :: ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் – 5 ஜனவரி மாஷம் , கி.பி. 2000

      பெருமதிப்பிற்குரிய இணைய நண்பர்களே!

      அநேக நமஸ்காரத்துடன் அடியேன் ரங்கபாஷ்யம் எழுதிக்கொள்வது. இப்பவும் நானும் கிருஷ்ணவேணியும் ஸ்ரீமத் ஆச்சார்யாள் கிருபையால் ரொம்பவும் ஷேமமாய் இருந்து வருகிறோம். உங்கள் எல்லோருடைய ஷேமபலன்களையும் அடியேன் தெரிந்து கொள்ள பிரயாசையாய் இருக்கிறேன்.

      உலகத்திலேயே மிகவும் பழைமையான மொழி சம்ஸ்கிருதம். ஆல விருட்ஷம் எப்படி ஆயிரம் விழுதுகள் விட்டு, ஒவ்வொன்றும் ஒரு மரமாக உருவெடுக்கும் போது, அந்த மூல விருட்ஷமானது, தான் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பூரிப்படையும் ஒரு தாயைப் போலவே மகிழுமோ, சம்ஸ்கிருதமும் அப்படித்தான். விழுதில் புறப்பட்ட அந்த மரங்கள் வானைத்தொடும் வகையில் வளர்ந்து பரவி இருக்கும் போது, மூல விருட்ஷத்தை தேடினால், கஷ்டப்பட்டுத்தான் பார்க்கமுடியும். சம்ஸ்கிருதமும் அப்படித்தான்.

      சமஸ்கிருதத்தை மாதிரியே, இந்துமதமும் உலகத்திலேயே பழைமையான ஒன்றாகும். மதங்களுக்கு எல்லாம் அதுதான் ஆல விருட்ஷம். பெண்களுக்கு தாய் என்ற அந்தஸ்தைக் கொடுத்து, அவர்களை சக்தியின் பீடமாக போற்றிய மதம் இந்துமதம். அதனாலேயே இந்துமதம் இன்றும் உலகளவில் உயர்ந்த மதமாக விளங்குகிறது.

      ஆதிகாலத்தில், இந்து மதத்தில் சரிவர ஒழுக்கம் பேண முடியாதவர்கள், வேதங்களும், சாஸ்திரங்களும் (B, C+, C, F கிரேடுகள்) தெரியாததால் சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்தவர்கள், மது, மாது போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள், இப்படியானவர்கள் எல்லாம் கட்டுப்பாடான இந்துமதத்தில் இருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள். களையெடுக்கப்பட்ட இந்த அதிருப்தியாளர்கள் ஆரம்பித்து வைத்தவைதான் உலகத்தில் உள்ள மற்ற மதங்கள். புத்த, சமண மதத்தினர், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோரும் செய்த கலகங்களினால், இந்துமதம் இன்று சற்று தூசிபடிந்து மங்கி இருக்கிறது.

      இன்று இந்துமதத்தைப் பார்த்து நிறையப் பேர் பரிகாசம் செய்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இந்துமதத்தைப் பற்றி சரியாக போதிக்கவேயில்லை. அதனால் தான், தமிழ் அரசன் போன்ற சிறுவர்கள் உன்னதமான நமது இந்து மதத்தைப் பற்றி, அவதூறாக பேசுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் இந்து மதத்தின் பெருமையைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், ஆயுள்காலம் தான் பத்தாது. இருந்தாலும் தமிழ் அரசன் மாதிரியான நாஸ்திகர்களை திருத்தி நல்வழியில் கொண்டு செல்லும் கட்டுரைகளை இங்கே எழுதுவது என் போன்ற பெரியவர்களின் கடமையாகும்.

      நான் என் பங்குக்கு இந்து மதத்தலைவர்களுள் மிகவும் வித்தியாசமானவரான வைஷ்ணவர் ராமானுஜரைப் பற்றி உங்களுக்கு வழங்கப் போகின்றேன். ராமானுஜர் வரலாறு நிறையப் பேருக்கு சரியாகத் தெரியாது. அவர் செய்த சமயச் சீர்திருத்தங்கள் ஏராளம். ராமானுஜரை உதாரண புருஷனாகக் கொண்டுதான், பாரதியார் தீண்டத்தகாதவர் ஒருவருக்கு பூணூல் அணிவித்தார். இப்போது காஞ்சிப் பெரியவர்களை தமிழ் அரசன் திட்டுவது போலவே, அந்தக் காலத்தில் ராமானுஜரை திட்டியவர்களும் ஏராளம். மதப்பணி என்றால் சும்மாவா?

      சோழர்கள், ஹொய்சளர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பலரின் அன்பும், ஆதரவும் சந்தேகமும், வெறுப்பும் பகையுமாக மாறி மாறி வாங்கிக்கட்டிக் கொண்ட ஒரு இலக்காக அவதிப்பட்டார். அந்த அவதியிலும் நூறு வயதிற்கும் மேலாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மதச்சேவைகளை ஆற்றினார். இவரைக் கண்டதும் வில்லினால் அம்பு போடவேண்டும் என்று சோழமன்னன் ஒரு காலத்தில் 144 தடை உத்தரவே இட்டிருந்தான். இதற்கு பயந்து, ராமானுஜர் மைசூரில் தலைமறைவாக வெகுகாலம் வாழ்ந்துவந்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதிரி தலைமறைவாக வாழ்ந்து போதிலும், அவனைப் போல கோழையாக வாழ்ந்ததில்லை. சரணடையப் போகிறேன் என்று சொல்லி எந்தக் காலத்திலும் அவர் யாருக்கும் கேசட் அனுப்பியதாக வரலாற்றில் சான்றே கிடையாது.

      அவர் கொண்டுவந்த மதச் சீர்திருத்தங்களினால், இந்து மதமே புது உயிர் பெற்றது. அந்த மறுமலர்ச்சியுடன், மத நல்லிணக்கத்திற்கும் வித்திட்டது. இன்று கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போதும் நோன்புகளின் போதும் அன்னிய மதத்தினருடன் ஜெயலலிதா, கருப்பையா மூப்பனார், கருணாநிதி போன்றவர்கள் சமபந்தி போஜனம் செய்கிறார்கள் அல்லவா? இந்த சம்பிரதாயத்தை முதலில் ஏற்படுத்திக் கொடுத்தவரே ராமானுஜர்தான்.

      காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கத்தை என்றும் நிலைக்கும் வைஷ்ணவத் தலைநகராக அமைவதற்கு அன்றே வித்திட்டார். உயர்வு, தாழ்வு அற்ற, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு நல்லிணக்க நகரமாக ஸ்ரீரங்கம் விளங்கியது என்றால் மிகையாகாது. ராபர்ட் கிளைவும் நவாப்பும் பகல் முழுவதும் கொலைவெறியுடன் கடும்போர் புரிவார்கள். ஆனால், கதிரவன் விழுந்து களைத்துப் போன அந்திப்பொழுதில் இருவரும் ஸ்ரீரங்கம் கோயிலில் தான் நட்புடன் தியானம் செய்து ஓய்வு கொள்ளுவார்கள். பரம வைரிகளுக்குக் கூட சாந்தம் கொடுக்கும் மகிமை வைஷ்ணவத்துக்கு இருந்தது. இதைப் பற்றி ஆழ்வார்கள் மிக அழகாக பாடியிருக்கிறார்கள்.

      ‘கரையான் புத்துக்கட்ட’ என்றெல்லாம் மீண்டும் திட்டி என்னை எழுதவிடாமல் செய்யாதீர்கள். உங்களுக்கு நல்லதே செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். விரைவில் ராமானுஜர் வரலாற்றை தொடர்கதையாக வழங்கப் போகிறேன். விறுவிறுப்பான இந்த பக்தி அமுதத்தை ரசிக அன்பர்கள் எல்லோரும் பருகி, ஆனந்தப் படுமாறு அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

      எம்பெருமான் திருவருள் எல்லோருக்கும் நிச்சயம் உண்டு.

      அடியேன்
      ரங்கபாஷ்யம்


      4. ரங்கண்ணா ராமன்

      இணைய அனபர்களே,

      வணக்கம். ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசனுக்கும், அம்ப்ரோஸ் செபஸ்தியானுக்கும் ஏதேனும் ரகசிய சம்பந்தங்கள் உள்ளனவா என்று கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளன. அப்துல்காதருக்கும், அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம்தான் இந்த இரண்டு பேரிடையேயும் உள்ளது.

      ரங்கபாஷ்யக் குழு, அம்ப்ரோஸ் செபஸ்தியான் என்ற பினாமி பெயரில், மலேசியாவில் ஒரு கிளை நிறுவனம் நடத்துகின்றது என்று வேண்டப்படாதவர்கள் நிறையப் புரளிகள் கிளப்புகின்றனர். கேட்க நன்றாக இருக்கின்றது என்ற ஒரே காரணத்துக்காக உண்மைக்குப் புறம்பான இந்த வதந்திகளை நம்பிவிடாதிர்கள்.

      இதன் மூலம் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், எங்கள் ரங்கபாஷ்யக் குழுவுக்கும், அம்ப்ரோஸ் செபஸ்தியான் என்ற பெயரில் மலேசியாவில் கேம்ப் அடித்துக்கொண்டு இயங்கும் ஒரு வர்த்தக ஸ்தாபனத்துக்கும் எந்த ரகசிய வியாபார உடன்படிக்கைகளோ, கொடுக்கல் வாங்கலோ, கைம்மாறு, கால்மாறோ கிடையாது.

      அம்ப்ரோஸ் நிறுவனர்களும், ரங்கபாஷ்யக் குழுவும் திரைகடலோடியும் திரவியம் தேடச்சென்ற கொள்ளைப்பட்டாளத்தின் இரண்டு மாலுமிக் கூட்டங்களே! மற்றபடி, தமிழ் இணையம் என்ற துறைமுகத்தில், தேவை ஒருமிப்பால் நங்கூரம் பாய்ச்சிய இரண்டு கப்பல்களே! இந்த இரண்டு நிறுவனங்களையும் சம்பந்தப் படுத்தி சந்தேகிப்பது, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப்பார்க்க முயற்சிப்பதாகத் தான் உள்ளது.

      அவர்கள் வேறு. நாங்கள் வேறு. எங்களது கொள்கை, குறிக்கோள்கள் வேறு. மேலும், எங்களுக்கு பேய் பிசாசு, பில்லி சூன்யம், பச்சை மூங்கில், சுட்ட கோழி, அவுச்ச முட்ட, ஆறுமுழக் கயிறு, பட்ட சாராயம், சுருட்டுக் கட்டு, உடம்புல சாம்பல், இடுப்புல உடுக்கை இவற்றில் எங்களுக்கு நம்பிக்கை (நம்பிக்கை என்று சொல்வதை விட தொழில்ஞானம் என்றுகூட சொல்லலாம்) கொஞ்சமும் கிடையாது. வெறும் Y2K programming க்குக்கே தகிடுதத்தம் போடுகிறோம். மேலும், முனீஸ்வர – சனீஸ்வர சகோதரர்களின் ஏகோபித்த ஆசீர்வாதமும் எங்களுக்கு பக்கபலமாக கிடையாது. நிலைமை இப்படி இருக்கும்போது, எந்த அடிப்படையில் நாங்கள் இந்த லைனுக்கு துணிந்து வரமுடியும்?

      மேலும் தொகுதி பங்கீடு பற்றி பேச, இப்போது என்ன அவசரம் வந்துவிட்டது? முதலில் மூப்பனார், ஜெ-சசிகலா, பாமக ராமதாஸ், வைகோ இவர்கள் ஒருசுற்று பேச்சுவார்த்தை நடத்திமுடிக்கட்டும். அப்போது யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி யோசிக்கலாம்.

      மற்றபடி, நான் மூப்பனாரையும், ஜெ-சசிகலா சகோதரிகளையும் சந்திக்கச் சென்றது, முறையே மரியாதை நிமித்தமாகவும், (எனது) தொழில் நிமித்தமாகவும் தான். இனிமேல் உங்களுக்கு, தான்தோன்றித் தனமாக கிளம்பிவரும் புலால் கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் நான் பொறுப்பல்ல.

      அன்புடன்

      விசேஷ நிருபர்
      ரங்கண்ணா ராமன்


      5. உள்ளிவாயன் பெருங்காயடப்பா :: உலகமாதா வாத்து (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

      யுகம் புரண்ட புருஷன் அவம் திரண்ட கருடன்
      சூக்மதாரி அடங்காப்பிடாரி இயமம் நியமம்
      சோதிடம் சொல்லா நித்ய ஞான கோவணதாரி
      காட்டாரி மலையாளபகவதி வேதசகாயி
      சின்னக்கருப்பி மஞ்சுள நாட்சி
      சரணவ மால ராஜநாயகி அம்மா நரநர
      பாவி கந்த சிவம் இடப்பாகி ஜிலேபி
      குலேபகாவலி ஆதரி நீயெனை
      அம்மா படிந்தேன் சரணம்
      ஹரி போல் ராம் ராம்
      கோவண்ணப்பால் ராம நமோ நமோ
      மலமறு ராட்ஸசி சூத்திரதாரிதன்
      சூல்தரு மோகி சரவணத்தாயே
      ஜெய ஜெய ஜெய ஜெய
      உலகம் வாழ அருள்பொழி மாதா!
      ___

      உள்ளிவாயன் பெருங்காயடப்பா.

      மறக்கமுடியுமா?

      மூணாம்வகுப்பிலே
      மூக்குத்தோண்டியதை
      மறக்கமுடியுமா?

      வீடுபெருக்கும்
      முனியம்மாவைப் பார்த்து
      விஸில் அடித்ததை
      மறக்கமுடியுமா?

      ஆத்தங்கரையிலே
      அல்வா அவுக் அவுக்கின்னு தின்னு
      பேதியாகி கோரைப்புல்லு பின்னாடி
      குந்தினதை மறக்கமுடியுமா?

      ஏழாம் கிளாசு வாத்தி
      இங்கிபிலீஸ¤ கத்துத்தந்தக்கா,
      எலந்தைப்பழம் தின்னதை
      மறக்கமுடியுமா?

      சினிமா போய்
      இரவிலே சைக்கிளிலே
      நிலவிலே திரும்பி வந்ததை
      மறக்கமுடியுமா?

      இப்போது,
      எட்டாத தொலைவிலே
      ரிச்மண்டிலே
      மண்டிபோட்டு
      கம்பியூட்டரிலே
      மாங்குமாங்கு
      தேங்கா ஸைஸிலே
      ஜாவா எழுதினாலும்
      இஸ்மயில் பாவா
      மூணாம் வகுப்பிலே
      மூக்கணாம்ப்பட்டி முனிசிபல் ஸ்கோலிலே
      மூக்குத் தோண்டியதையும்
      முனியம்மாவையும்
      மறக்கமுடியுமா?

      அதனால், தீர்மானத்துக்கு வந்தாச்சு.
      லே ஆப்போ லேத் வர்க்கோ
      ரிச் மண்டு ஜாப்பை விட்டுவிட்டு
      மூன்றாம் வகுப்பிலே எலந்தைப்பழம் தின்னு
      திரும்ப இங்கிபிலீசு படிக்க
      பாபாக்கு ஹாயா விஸில் அடிக்க
      கோரைப்புல் கிராமத்துக்குக்
      கோவணம் கட்டப் போகிறேன்.

      முனுசாமி! முனியம்மா!!
      வட் எவர் யு டூ, கிவ் இட் அப்.
      பிளீஸ் ரிட்டர்ன் பக் டு
      யுவோர் பழைய பாத்திரம்.

      ஜாவாவே உன் உப்பு வாய்க்கு
      ஒரு மூட்டை அல்வா.

      கண்டினியூட்டி ஸாட்!
      டேக் டென் டு த பவர் இன்பினிட்டி!
      ஆக்ஸன் பிளீஸ்!!


      6. ரங்கண்ணா ராமன் :: கிடா எப்படி வெட்டுவாங்க!

      வணக்கமும், வாழ்த்துக்களும். உங்களது சிந்தையிலிருந்து மந்தை, மந்தையாக வெளிப்படும் விந்தைகளை எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கின்றது. மெய் சிலிர்ப்பதைப் பற்றி ரங்கபாஷ்யம் சார் மிக சிங்காரமாக எடுத்துச் சொல்வார். கந்தசாமியின் கிராமத்தில் கிடாவை எப்படி மெய் சிலிர்க்கவைத்து வெட்டுவார்கள் என்று graphic voilence உடன் ஒருமுறை விவரித்திருக்கின்றார். கிடாவை வெட்டும் பூசாரி, கிடாவுக்கு மாலைகள், சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, பட்டாக்கத்தியின் கூரான நுனியினால், கிடாவின் கழுத்தில் மெல்ல ஒரு ‘குத்து’ குத்துவான்.

      இதை சற்றும் எதிர்பார்க்காத கிடா, தன்னில் ஏற்படும் involuntary impulse இல் சிலிர்த்துக் கொள்ளும். அந்த சிலிர்ப்பில், கழுத்தில் சரியான பதத்துக்கு விறைப்பு ஏற்படும்; அப்போது பார்த்து பூசாரி பட்டாக்கத்தியை சதக்கென்று ஒரே போடாக இறக்குவான். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு, ரத்தம் நான்கு (பக்கம்). அந்த ரத்த வெள்ளத்தைப் பார்த்ததும் ஜனங்களுக்கு ஒரே மகிழ்ச்சி வெறி. மேளக்காரன் உச்சஸ்தாயியில் மேளம் அடிப்பான். சாமி ஆடுபவர்கள் எந்த ஒரு நாட்டிய இலக்கணமும் இல்லாமல் ஆடுவார்கள். சில பெண்கள் சாமி ஆட்டத்துக்கு பின்னணி குரல் கொடுப்பதுபோல, உல்லோல்லோல்லோ என்று ஒருமாதிரியாக நாக்கை உதப்பலாட்டம் போட்டுக்கொண்டே, தமிழ்பாஷை தொடங்கும்முன்னே இருந்த ஏதோ ஒரு முன்னோடி பாஷையில் பாடுவதுபோல பாடுவார்கள். இவற்றையெல்லாம் ரங்கபாஷ்யம் சார் மாதிரியே, வெங்காய ராமசாமி நாயக்கரும் கண்கூடாக நேரில் பார்த்திருப்பார் போலும். அதனால்தான், தமிழ்பாஷையை அப்படி விவரித்திருக்கின்றார்.

      நிற்க.

      நான் முக்கியமாக சொல்ல வந்த விசயம் இதுதான். நண்பர் கிருஷ்ணனின் வேண்டுகோளின்படி நீங்கள் சிருங்கார ரசம் எழுத ஆரம்பித்ததற்கு நன்றியும் பாராட்டுதல்களும். நியூஜெர்ஸியில் நிர்வாண நடனம் ஆடும் தமிழ் அம்மணிகளின் பேட்டித் தொகுப்புக்களை இணையத்தில் எழுதவேண்டும் என்று எவ்வளவுதான் ஆர்வமாக இருந்தாலும், நேரமின்மை காரணமாக இதுவரையிலும் நிகழவில்லை. நேரம் கிடைக்கும்போது, பேட்டியின் முழுவிவரங்களும் எழுதுகின்றேன்.

      இந்த இரண்டு அம்மணிகளின் ஆட்ட விஷயத்தில் மாத்திரம் சாதி பேதம் எதுவுமே கிடையாது.

      அம்மனும் ‘அம்மணி’யாகத்தான் ஆடுகின்றாள்.
      அம்பாளும் ‘அம்மணி’யாகத்தான் ஆடுகின்றாள்.

      அம்மணமாக ஆடி தமிழ் வாலிப வயோதிக அன்பர்களை ஜொள்ளு கொட்ட வைத்து, பரவசத்தின் எல்லைக்கே இட்டுச்செல்லும் இரண்டு தமிழ்ப் பெண்மணிகளில் ஒருவர் அம்மன். மற்றொருவர் அம்பாள்.

      அம்மன் சரியான அட்டைக் கருப்பு. நிச்சயம் கந்தசாமி அல்லது குப்பன் மாதிரியானவர்களின் கிராமம் போல தெரிகிறது. பக்கத்தில் போனாலே தமிழ்மணம் (வேறென்ன, கடலைப்புண்ணாக்கு நெடிதான்), போட்டுக் கொண்டிருக்கும் சென்ட்டையும் மீறி, கமழ்கின்றது. அம்மன், அம்மணியாகி ஆடும் ஆட்டமோ, ஒரே டப்பாங்குத்து ரெக்கார்டு டான்ஸ்தான். சில நேரங்களில் கிடாவெட்டும் திருவிழாவில் சாமி ஆடுபவர்களின் ஆட்டத்தை நினைவுபடுத்துவது மாதிரி இருக்கின்றது. பாவம், அவள் என்ன செய்வாள், நம்பிவந்த கணவன் கைவிட்டு விட்டான். வேறெந்த தொழிலும் தெரியாது. வாழ்க்கை சூன்யத்திலிருந்து விடுபட ஆண்டவனாக ஒரு வழியை அமைத்துக் கொடுத்திருக்கின்றான். தனக்கு ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது என்ற நிம்மதி ஒரு பக்கம் இருக்க, தன்னை நம்பி கிளப்புக்கு வரும் ரசிகர்கள் வாழ்க்கையில் தன்னால் இயன்ற அளவுக்கு சந்தோசம் அளிக்கமுடிகின்றதே என்ற மனத்திருப்தியை, அவளது கண்ணில் இருந்து வழிந்த ஆனந்தக்கண்ணீர் துளிகளே அமைதியாக சொல்லின.

      அடுத்து நமது அம்பாள். அம்பாளின் கதையே வேறு. ஆனால் நோக்கம் ஒன்றுதான். அம்பாள் நல்ல வைதீகமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இன்னமும் ஆச்சார அனுஷ்டானங்கள், பூஜை புனஸ்காரங்கள் எல்லாவற்றையும் கடைபிடிப்பவர்கள். Wall Street இல் பெரிய கம்பெனி ஒன்றில் பொறுப்பான பதவி ஒன்றை வகிப்பவர்கள். சின்ன வயதிலிருந்தே சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும், கலாஷேத்திராவில் முறைப்படி கற்றவர்கள். நாட்டிய அரங்கேற்றம் நடத்தி, நிறைய நாட்டியக் கலைநிகழ்ச்சிகளும் உலகெங்கும் டூர் செய்து இந்தியக் கலாச்சாரத்தை பலநாட்டுத் தூதரகங்களின் மூலம் பரப்பியவர்கள்.

      அம்பாளின் குடும்பப் பின்னணியில் சோகமென்று எதுவும் கிடையாது. இன்னும் குழந்தைகள் இல்லாவிட்டாலும், நிறைவான திருமண வாழ்க்கை. இவரது திருமணம் காதல் மணம். கலப்பு மணம். கணவர் கலையுணர்வு மிகுந்த ஒரு தலித்து.

      கணவரின் பரிபூர்ண சம்மதத்துடனும், கொடுக்கும் உற்சாக மிகுதியாலுமே இந்த அம்பாள் ‘அம்மணி’யானார். இலக்கண சுத்தத்துடன், கலாஷேத்திரா ஸ்டைலில், இவர் நிர்வாணமாக பரதநாட்டியம் ஆடுவது, எனக்குத்தெரிந்து அமெரிக்காவிலேயே முதல் நிகழ்வு என்றுதான் நினைக்கின்றேன். ‘எப்படி உங்களால் இந்த மாதிரி செய்ய முடிகின்றது, அதுவும் இல்லற வாழ்வில் இருந்து கொண்டே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பரந்த மனதும், திறந்த மேனியும் இருந்தால், இந்த தொழில் ரொம்ப சுலபம்’ என்றார்கள்.

      அலுவலக நேரத்தில்கூட, ஒழுங்காக வேலை செய்யாமல் internet இல் உலா வரும் பொறுப்பற்ற இந்திய சோம்பேறி programmer கள் மத்தியில், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற ஈடுபாட்டுடன், சிரத்தையுடன் சிருங்கார ரசத்தைப் பரப்பும் இந்த அம்மனையும், அம்பாளையும் நினைத்தால், கைகூப்பி வழிபட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.

      அன்புடன்,

      விசேஷ நிருபர்
      ரங்கண்ணா ராமன்


      7. ஒட்டக்கூத்த ராயன்

      சாந்த சொரூபன் தகர டப்பா (Tin Drum) என்கிற மொழியியல் அறிஞரைத் தெரியாதவர்கள் தமிழ் இணைய உலகில் வெகுசிலரே எனலாம். அவர் எழுதுவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிறது என்பது தெரிந்த விசயம் தான்.

      ஆனால், உங்களை எல்லாம் மகிழ்விக்க தமிழ்நெட்டில் இப்போது புதிதாக உள்ளிவாயன் பெருங்காய டப்பா (Hing Drum) என்கிற பாபாஜி அவர்கள் எழுந்தருளியிருக்கின்றார். அவரது வருகை நாம் எல்லோரும் பெற்ற பெரும்பாக்கியமே எனலாம்.

      பொதுவாக, துணுக்குப் படிப்பவர்கள், ஒருவித மெத்தனமான ரிலாக்ஸ்டு மனதோடு படிப்பார்கள். அவர்களே, கவிதை என்று ஒன்றைக் கையில் கொடுத்தால், ஏதோ அட்டென்ஷனில் தேசிய கீதத்தைக் கேட்பதுபோல, பீடத்தில் வைத்து சூடத்தைக் கொளுத்தாத குறையாக, பயபக்தியோடு ரொம்பவே மரியாதையோடு படிப்பார்கள். இது சகஜம். மரபுக்கும் கவித்துவத்திற்கும் நாம் கொடுக்கும் மரியாதையின் அடையாளமே அது.

      பெருங்காய டப்பாவின் கவிதைகள், தமிழினத்தை சீர்திருத்துவதற்காக எழுதப்பட்டவை என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே, பெருங்காய டப்பாவின் கவிதைகளை படிப்பதற்கு முன், “மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு, துணுக்குப் படிப்பதுபோல, ஜாலியாக ரசித்துப்படியுங்கள். அதில் வரும் சத்தமும் சந்தமும் தானாகவே உங்களை ஆட்கொள்ளும்.

      பெருங்காய டப்பாவின் மூன்று கவிதைகளை இன்று அனுப்புகிறேன். மற்றவற்றை இன்னொரு நாள் அனுப்புகிறேன். உங்களது விமரிசனங்கள் எதனையும் தாங்கும் வலி மை பெருங்காய டப்பாவுக்கு உண்டு என்று நம்பலாம். “வாசமில்லா டப்பாயிது… வசந்தத்தைத் தேடுது…” என்று பாடினாலும் அசமந்தமாகக் கேட்டுக்கொள்ளும்.

      எதையும் தாங்கும் இதயம்கொண்ட டப்பாயிது; எளிதில் நொறுங்கிப் போகா டப்பாயிது; வெள்ளத்தால் அழியாத, வெந்தணலால் வேகாத, மோப்பக் குழையா பெருங்காய டப்பாவே!

      அன்பன்
      ஒட்டக்கூத்த ராயன்

      டிஸ்கிளெய்மர்: பெருங்காய டப்பாவுக்கும் ரங்கபாஷ்யக் குழுவுக்கும் கொடுக்கல் வாங்கலோ, பிறிதொரு சம்பந்தமோ கிடையாது.


      8. தகர டப்பா :: பண்ணையார் குடும்ப சரித்திரம் அல்லது மோகினிப் பித்தர்கள் மர்மம்

      அம்புரோஸின் பொறுப்பற்ற பில்லி சூன்ய மந்திரங்கள் நாட்டில் இவ்வளவு பாதிப்பை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க முடிந்திருக்காது. இத்தனைக்கும் தமிழ்நெட்டின் பிரபல்ய one-line comedian, மதிப்பிற்குரிய செல்லையா திரு அவர்கள் ‘உள்ள ஆபாசமா?’ என்று வினவி எச்சரித்தும்கூட, மக்கள் இந்த மயக்க வலையில் சிக்குவது மிகவும் வருந்தத்தக்கதே.

      சுலைமான் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி மோகினி மந்திரங்களுக்கு, தேடி வந்து விழும் விட்டில்பூச்சி மாதிரி முதற்பலி ஆவர் என்பது எதிர்பார்த்ததே. ஆனால், விவேகம் மிகுந்த சுவாமிநாதன் கூட நிதானத்தை இழந்து வாழைத்தோப்பு தரும் கிறக்கத்தில் தம்மை அர்ப்பணித்து விட்டது எம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றது. தமிழர்களாகிய நாம் இந்த கிறக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். இந்த நேரத்தில்கூட, நமது கொடுக்காப்புளிப் புலவர் தமிழ் அரசன் அம்புரோஸுக்கு சரியான பதிலடி ‘கொடுக்கா’மல் அசமந்தம் காத்தாரென்றால், அது அவர் வெறும் கொடுக்கா ‘புலி’ புலவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்ததாகி விடும்.

      சுவாமிநாதனுக்கு இதில் என்ன சம்பந்தமோ எனக்குத் தெரியாது. ஆனால், வேண்டுமென்றே அவர் உண்மையில் நடந்ததை மாற்றி எழுதியிருக்கின்றார். பவுர்ணமி அன்று வந்தது சின்னவீட்டுக்கு சென்று கொண்டிருந்த பண்ணையார் அல்ல. பண்ணையாரின் மூத்த மகள்தான், நிலாச்சோறு நிறைய தின்றுவிட்டதாலும், ஏப்பம் வராமல் அவஸ்தையாக இருந்ததாலும் வாழைத்தோப்புப் பக்கம் வாக் போனாள். அங்கே மோகினிக்காக காத்திருந்தவர் (அவ’ர்’ யாராயிருந்தாலும் நமக்கென்ன, அவர் நமக்கெல்லாம் பரிச்சயப் பட்டவர், வேண்டியவர் என்பதால் மரியாதை கொடுக்க வேண்டியதாயிற்று, அவ்வளவுதான்), பண்ணையார் மகளை மோகினி என்று நினைத்து ஆசையாய் ஒடினார். அவரைப் பார்த்ததும் ‘பேயாக இருக்குமோ?’ என்று மிரண்ட அந்த பெண் கூச்சலிடவும், ஊரே திரண்டுவிட்டது. ஆனால் அவர்கள் இந்த பெண்ணின் கதையைக் கேட்காமல், அது அவளது கள்ளக் காதலன் என்று பஞ்சாயத்து செய்து, அவருக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி மற்ற மரியாதைகள் எல்லாம் கச்சிதமாக செய்து கழுதையின்மேலேற்றி ஊர்வலமும் அனுப்பி வைத்தனர்.

      இந்த அவமானம் தாங்காமல் பண்ணையார், மூங்கில், உயிர்க்கோழி, 18 முட்டை, ஆறுமுழக்கயிறு (அதுதான், தெரியாதவர்களுக்கென்று அம்புரோஸ் ஒரு சரக்குப் பட்டியலே போட்டுக் கொடுத்திருக்கின்றாரே) சகிதமாக புளியமரத்துக்குப் போய் சுருக்குப் போட்டு செத்துவிட்டார். பண்ணையாருக்கு ரெண்டு மகள்கள். அந்த பெண்களுக்கு எதிர்காலம் திடீரென்று சூன்யமாகி விட்டது. ஜே ஜே என்று வாழ்ந்த பண்ணையாரின் குடும்பம் ஒரு பாதகரின் அற்ப மோகினிப் பைத்தியத்தினால், நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. காலமெல்லாம் தீராத அசிங்க முத்திரை, அந்த அக்காப் பெண்ணின்மேல் குத்தப் பட்டுவிட்டது.

      பாரிவள்ளல் புதல்விகள் கதை உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கின்றதோ, தெரியாது. ஆனால், இந்த பெண்களின் கதையும் அங்கவை, சங்கவை சகோதரிகள் கதையாகத் தான் ஆகிவிட்டது. இனிமேல், எந்த சேர, சோழ, பாண்டிய மன்னன் (கொடுக்காப்புளி மன்னன் என்று வாசிக்கவும்) இவர்களை பெண்கேட்டு வந்து மணம்முடிக்கப் போகின்றான். ஆகவே அவர்கள் சோகத்தில்,

      அற்றைத் திங்கள் ‘அவ்வெண்ணிலவில்’
      எந்தையும் இருந்தார், தோப்பும் இருந்ததுவே

      என்று திரும்ப திரும்ப அந்த பவுர்ணமி நாளையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். பாவம், கபிலர் மாமாதான் தள்ளாத வயதிலும் கூட பொறுப்பேற்று வரன் தேடிக்கொண்டிருக்கின்றார்.

      இந்தப் பெண்களின் வீடு, சொத்து, பத்து, வாழைத்தோப்பு எல்லாம் போய்விட்டது. அக்காப் பெண் வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் சுரத்தில்லாமல் நடைப்பிணம் போல் காலம்தள்ளுகின்றாள். தங்கைய்யோ அக்காவுக்கு நேர்ந்த கதியை நினைத்து உருகி அழும் அதே வேளையில், தனது கடமையுணர்ச்சியோடும் நெஞ்சுரத்தோடும் அக்காவைத் தேற்றி பழையதை மறந்து எதிர்கால வாழ்க்கையை இனிமையாக வாழவேண்டும் என்று உற்சாகமூட்டுகின்றாள்.

      இந்த சம்பாஷணைகளை சிம்பாலிக்காக, அக்காக்காரி ‘வாழலை, வாழலை…’ (வாழ இல்லை) என்று தெருவில் கூவி வாழை இலை விற்பதும், தங்கையோ, ‘வாழக்கா, வாழக்கா…’ (வாழ் அக்கா) என்று கூவி வாழைக்காயை விற்பதுவும் வாடிக்கையாகி விட்டது.

      பண்ணையார் குடும்பம் வாழைத்தோப்போடு கொடிகட்டி வாழ்ந்த காலம் போய், ஒரு மோகினிப்பித்தரால், சின்னாபின்னமாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட கதையை ‘வாழக்கா’, ‘வாழலை’ என்ற ரெண்டே வார்த்தைகளில் சொல்லிக்கொண்டு செல்லும் அக்கா-தங்கையைப் பார்க்கும் ஊர்மக்களுக்கு கண்கள் குளமாகி, நெஞ்சே பிளப்பதுபோல இருந்தது.

      !
      !
      !
      !

      பண்ணையாருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்

      தகர டப்பா


      9. சாந்தி தங்கராஜன்

      நீங்க இங்க எழுதறதுல ரொம்ப சந்தோசம். இந்த மாதிரி ஒரு கம்பெனிக்காகத்தான் ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டிருந்தேன். நீங்க ஒண்ணு கவனிச்சீங்களா, இங்க எழுதறதுல முக்காலே அரைக்காவாசிப் பேர் எல்லாருமே ஆம்பளைங்க தான். என்னத்தத்தான் மாஞ்சி மாஞ்சி இந்த இன்டர்நெட்டைக் காட்டி மாயறாங்களோ, நமக்கு வீட்டு வேலைகளுக்கே நேரம் பத்தமாட்டேங்குது. கழுதை கெட்டா குட்டிச் சுவர்ங்கற மாதிரி, எந்நேரமும் இன்டர்நெட்டுத்தான் அவருக்குப் பெரிசாப் போச்சு. இப்ப வந்தவங்க எல்லாரும் WALL STREET ல போயி உத்தியோகம் பார்த்து கை நெறய சம்பளம் வாங்கறாங்க. இவரு இன்னமும் இந்த little WALL (குட்டிச்சுவர்) STREET ஐயே சுத்தி சுத்தி வந்திக்கிட்டு இருக்காரு. எங்களுக்கு எப்பத்தான் விடியப் போகுதோ?

      ரங்கண்ணாவுக்கு நீங்க நறுக் நறுக்குன்னு பதில் வெட்டற ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தட்டிக்கேட்க ஆளில்லைங்கற (ஆக்சுவலா பொம்பளைங்க இல்லைங்கற) தைரியத்துலதானே, அவரும் டிப்பிக்கல் ஆம்பளை மாதிரி இவ்வளவு இளக்காரமா எழுதறாரு. பரவாயில்லை, விட்டுத்தான் பிடிப்போமே. அவரும் அவரோட ஜால்ரா வெட்டியாப் போனவனும் என்னதான் சொல்ல வர்றாங்கன்னு ஒரு கை பார்த்துருவோம். Let us hear it from the horse’s mouth ன்னு சொல்லுவாங்களே, இந்த லொள்ளு பிடிச்ச ஜொள்ளுக் குதிரைங்க, நம்ம கிட்ட கொள்ளுவா கேட்குது? கேக்கட்டும், கேக்கட்டும், போகப் போக நாம அவங்களுக்கு அல்வாவே கொடுப்போம்.

      அந்தம்மா கிருஷ்ணவேணி மாமியோட முகராசிக்காகத் தான் நானும் ரங்கபாஷ்யக் குழுவுல சேர்ந்து எழுதவே ஒத்துக்கிட்டேன். அதுக்காக ரங்கண்ணாவையோ, குப்பனையோ குறை சொல்லறதா அர்த்தம் இல்லை. ஆண் வர்க்கத்துக்குன்னே உள்ள குறுக்கு புத்தி அவங்களை விட்டு எங்க போகும்? அதைத் தப்பா பெருசா எடுத்துக்கல்லேன்னா, மத்தபடி எங்க டீம்ல எல்லாரும் ஜாலியான ஆளுங்கதான். அதுவும் ரங்கண்ணா ரொம்ப தமாஷா பேசுவார். எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கும். வெட்டிக்கு வாய் அதிகம். டீம்ல யாரும் அவனைக் கண்டுக்கறதேயில்லை. அதான், இங்க வந்து உங்களை எல்லாம் அறுக்கறான்.

      ஆமா, தேங்க்ஸ்கிவ்விங்க்கு என்ன செய்யப் போறீங்க? எங்கயும் போறீங்களா…? நாங்க இந்த வருஷம் வீட்டோடத்தான். எங்க வீட்டுக்காரரோட கிளாஸ்மேட் நண்பர் ஒருத்தரு குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வர்றாங்க. வியாழனும் வெள்ளியும் வீட்டோட இருந்து விருந்து சாப்பிட்டுட்டு, சினிமா, ஷாப்பிங்ன்னு பொழுது போயிடும். சனிக்கிழமை நியூயார்க்கை சுத்திப் பார்க்க எல்லாரும் 2 வேன்ல போறோம்.

      நாளைக்கு காலையில வீட்டில வெண்பொங்கல், உளுந்தவடை, சேமியா கேசரி. வடைக்கு இந்த MTR mix, GITS mix ன்னு விக்கறான்னே இந்த ரெடிமிக்ஸ் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. டேபிள்ட்டாப் கிரைண்டர் ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன். உளுந்து ஊறப்போட்டு, நைஸா அரைச்சி எடுத்து, நெறய shallots உம் கறிவேப்பிலையும், இஞ்சியும் நறுக்கிப் போட்டுத்தான் வடை சுடுவேன். Shallots ன்னாத்தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே, நம்ம ஊரு சின்ன வெங்காயம் மாதிரி, ஆனா இன்னமும் பெருசா, பருவட்டா இருக்கும். பவுண்டு 2 டாலர் சொல்லுவான், இருந்தாலும் அதைப் போட்டு வடை சுட்டு சாப்பிட்டுட்டீங்கன்னா, வாழ்க்கைக்கும் நாக்கு அதையே நெனச்சி ஏங்கிக்கிட்டிருக்கும்.

      அப்பறம் டின்னருக்கு மெயின் ஐட்டம் டர்க்கி. குழந்தைகளுக்கு ஆவன்ல வச்சி, stuffing போட்டு ரோஸ்ட் செஞ்ச டர்க்கி. பெரியவங்களுக்கு வான்கோழி பிரியாணி. தீபாவளி, பொங்கல் நேரத்துல விருதுநகர் நாடார் கடைகள்ல வான்கோழி பிரியாணி ஸ்பெஷல்ன்னு மணக்க மணக்க போடுவாங்களே, அதுகூட தாளிச்சிக் கொட்டின கெட்டித்தயிர்ப் பச்சடியும் சேர்த்துக்குங்க. ஒரு தடவை சாப்பிட்டுட்டு பீடா போட்டாச்சுன்னா, அந்த பிரியாணி மணம் ஒரு வாரத்துக்கு கையை விட்டுப் போகாது. அதே ரெசிப்பியை வச்சித்தான் நாளைக்கு வான்கோழி பிரியாணி செய்யப்போறேன்.

      ஆமா, நான் பாட்டுக்கு பிரியாணியைப் பத்தி பேசிக்கிட்டே போறேன். மொதல்ல, நீங்க வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா, அதச் சொல்லுங்க. நீங்க எழுதற ஜாடைய வச்சிப் பார்த்தா, நீங்க பிராமின்ஸ் போலத் தெரியுது. ஆனா பிராமின்ஸ் ஒண்ணும் பப்ளிக்கா மட்டன் சாப்பிடறது இல்லியே. எங்க ரங்கபாஷ்யம் சார் ஐதிகமான அய்யங்கார்தான். ஆனா, அவர் குடிக்கற விஸ்கியில பாதியைக் கூட பாலமுரளிகிருஷ்ணாவோ, சுருளிராஜனோ தாக்குப்பிடிச்சி சாப்பிட முடியாது. ஆனா ஒண்ணு, கிருஷ்ணவேணி மாமி வீட்டுல மட்டன் வகையறா எல்லாம் புழங்க மாட்டாங்க.

      சரி உமா, உளுந்து ஊறிடுச்சுன்னு நெனைக்கிறேன். போயி அரைக்கனும். நெறைய வேலை இருக்கு. அடிக்கடி எழுதுங்க. அப்ப பார்க்கலாமா?

      அன்புள்ள

      சாந்தி தங்கராஜன்


      10. சராசரி குப்பன்

      கும்பிடுறேனுங்க. நான் தான் குப்பன், இப்பத்தான் ஊர்ல இருந்து வந்தேன். ஊரா அது, சரியான குப்பக் காடு. தேர்தல் வேலைக்குன்னு நம்மள நல்லா பெண்டு நிமித்திப்புட்டாங்க. வேலை முடிஞ்சதும் ‘அப்ப பார்க்கலாண்டா குப்பா’ன்னு கழத்திப்புட்டாங்க. கட்சி ஆபிஸ்ல இருந்து அப்பப்ப பிரியாணி பொட்டலமும் பாட்டிலும் கொடுத்ததோடு சரி, கைச்செலவுக்கு நாலு காசு தர வக்கில்லாம போயிட்டாங்க.

      என் வாழ்க்கையிலே இந்த மாதிரி ஒரு தேர்தலை நான் பார்த்ததேயில்லை. அரசியல் வாதிங்க எல்லாம் ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க. எதிர்காலம் ஒரே இருட்டா இருக்கறதாவும் பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியாம திகைக்கறதாகவும் பேசிக்கறாங்க. முன்னாடி எம்ப்பியா இருந்த எங்க பக்கத்து ஊர்க்காரருக்கு இந்தவாட்டி கட்சில்ல இருந்து டிக்கட்டு கொடுக்கல. அவங்க சம்சாரம் ‘போயி கொத்தனார் வேலை செஞ்சாவது நாலு காசு சம்பாதிச்சுட்டு வந்தாத்தான் சோறு’ன்னு சொல்லி விரட்டி அடிச்சிட்டாங்க. பாவம், அவரும் என் கூட சேர்ந்துக்கிட்டு போஸ்டர் ஒட்டுன்னாரு. அமெரிக்காவுக்கு நான் போய் சேர்ந்ததும் பின்னாடியே அவரையும் கூப்புட்டுக்கணும்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு. காளிமுத்து மாதிரி இணையத்துல நல்லா அறிக்கை விடுவாராம். நாட்ல நெலம அப்படி இருக்கு. இந்த லட்சணத்துல எம் பையன் மந்திரி ஆயிருவான்னு ஆத்தா வேற ஊரெல்லாம் பொலம்பித் தள்ளறா. சுத்த விவரம் கெட்ட ஆத்தா.

      சொந்த ஊர்லதான் செல்வாக்கு இல்லேன்னு ஆயிடுச்சு. ஆனா, எங்க மொதலாளி புண்ணியத்துல குப்பன் கெட்டா அமெரிக்கான்னும் அமஞ்சுடுச்சி பாருங்க. இந்தக் குப்பன் ரொம்ப கொடுத்து வச்சவன் தாங்க. ஆனா இதெல்லாம் பார்க்க எங்க நயினாதான் இல்லே. காமராசு காலத்துலேயே மண்டையப் போட்டுட்டான், பாவம்.

      ஆனாலும் இந்த நாலு மாசத்துல அமெரிக்கா ரொம்பத்தான் மாறிப்போயிடுச்சுங்க. எங்க மொதலாளி ரங்கபாஷ்யம் சார் முன்னமாதிரி இல்லே. அவரோட பையன் பார்த்தசாரதியும் மாட்டுப்பொண்ணும் தனிக்குடித்தனம் போயிட்டாங்க. ரொம்ப தூரம் ஒண்ணும் போயிடல்ல, ரெண்டு பிளாக்கு தள்ளிதான். இருந்தாலும் எம் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான்னு இத்தினிநா நம்பிக்கையோட இருந்த கிருஷ்ணவேணி மாமி ஏமாற்றத்துல இடிஞ்சி போயிட்டாங்க. டிப்பிரஷன்லேயே டவுன் ஆகி, புரோசாக் மாத்திரை சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. வளர்த்த கடா மார்ல பாயும்னு சொல்லுவாங்க. ரங்கபாஷ்யம் சாரோட பையன் தனிக்குடித்தனம் போனது மாத்திரம் இல்லாம, மொகம்மூடி வேற மாட்டிக்கிட்டு இணையத்துக்கே வந்துட்டதா, நம்ம சர்க்கஸ் வளையாபதி சார் சொன்னாரு. பாவம் எப்படி இருந்த பாஷ்யம் சார் குடும்பம், யார் கண்ணு பட்டதோ, எப்படி ஆயிடுச்சி பாருங்க.

      வளையாபதி சாரும் துப்பாக்கி நாயக்கரும் தான் என்னைக் கூப்பிட்டுப் போக ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருந்தாங்க. பாஷ்யம் சார், கம்பெனியில நெறய பேருக்கு சம்பள பாக்கி வச்சிருக்கறதாகவும், அதனாலதான் இணையத்துல எழுதறத விட்டுட்டாங்கன்னும் சொன்னாங்க. நான் இல்லாத நேரம் வெட்டியா போனவனை, நம்ம பிலிப்பய்யாவுக்கு ஏஜன்ட்டா இர்றான்னு சொல்லிட்டுப் போனேன், அவன் என்னடான்னா அவரை பாடாப் படுத்திட்டான்னு சொன்னாங்க.

      என்ன இருந்தாலும், நீங்க வெட்டிக்கு இவ்வளவு தூரம் வாலு முளைக்க விட்டுருக்கக் கூடாதுதான். கடேசில என்னமோ, ஒரு நல்ல குருநாதராப் பார்த்து சீடனா சேர்ந்தானே, அந்த மட்டுக்கும் சந்தோசம் தான். நான் வளையாபதி சாரையும் துப்பாக்கி நாயக்கரையும் எப்படியோ பேசி நைஸ் பண்ணி திரும்பவும் எழுதவக்கப் பாக்கறேன். துப்பாக்கி நாயக்கரு பார்க்கறதுக்குத்தான் இஞ்சி மொறப்பா தின்னவரு மாதிரி இருப்பாரு. மத்தபடி, அவருக்கும் வளையாபதி சார் மாதிரியே அனுசரிச்சிப் போகற சுபாவம்தான். இங்க இணையத்துல இப்ப எல்லாரும் உசிலைமணி மாதிரி தலையினாலேயே உருண்டு நடக்கறதயும் ஓடறதயும் பார்த்தா, சர்க்கஸ் வளையாபதி சார் ரொம்ப குஷாலாகிப் போயிடுவார்.

      ஒங்களை எல்லாம் திரும்பியும் சந்திக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். ஒரே கொட்டாவியா வர்றது… கொஞ்சநா டைம் கொடுங்க. மொதல்ல இந்த ஜெட்லாக் போயித் தொலையட்டும். வெட்டியா போனவனைப் பத்திக் கவலைப் படாதீங்க. அவனை எப்பப்ப, எப்படி தட்டிவிட்டு ஒரு லெவல்ல வச்சிருக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். அவனைப் போயி சீரியஸா எடுத்துக்கிட்டு, இத்தினிநா ஜாலியை கெடுத்துக்கிட்டு, வெட்டியா போயிட்டீங்களே. சரி சரி, மேக்கொண்டு ஆக வேண்டியதப் பாருங்க. ஒண்ணு மாத்திரம் மனசுல வச்சுக்கங்க…

      ஜாலிதான் நமக்கு எப்பவும் ஜோலி

      சராசரி குப்பன்

      பி.கு.: ஆமா, பீன் கவுண்டர் அய்யா, அதுதான் நம்ம அலெக்ஸ், அப்பறம் மாப்பிள்ள மகேஷ் இவுகள்ளாம் ஊர்லதான் இருக்காகளா?


      11. ரங்கண்ணா ராமன்

      காலப்போக்கின் வேகமும், காலத்தின் அருமையும், காலன் வந்து வாசலில் நிற்கும்போது தான் தெரியும். அப்போது தான் வாழ்க்கையை ஃப்ளாஷ்பேக்கில் ஓட்டிப்பார்ப்பார்கள். அடடா, வாழ்க்கையை எப்படியெல்லாம் வெட்டியாக போக்கினேன், அந்த நேரங்களை என் மனைவி, மக்களுடனும் மற்ற நண்பர்களுடனும் மகிழ்ச்சிகரமாக கழித்து இனிமையான நினைவுகளாவது நிறைய விட்டுச்சென்றிருக்கலாமே என்றெல்லாம் தோன்றும். இந்த காலம் கடந்த ஞானோதயத்துக்குப் பெயர்தான் ‘கடைசி நேரத்தில் சங்கரா, சங்கரா என்பது’.

      ரங்கபாஷ்யக் குழுவினர் இங்கே எழுத ஆரம்பித்து சென்ற வாரத்துடன் ஒரு வருடம் ஆகிறது. ஏதோ நேற்றுதான் ஆரம்பித்த மாதிரி நிறைய பேருக்குத் தோன்றலாம். சென்ற மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி பெரியவர் ரங்கபாஷ்யம் அவர்கள் திடுதிப்பென்று இங்கு குதித்தார். அன்றிலிருந்து இன்றுவரையிலும் எங்கள் குழுவினர் எழுதிய கட்டுரைகளின் எண்ணிக்கையை நிறையப் பேரால் ஊகிக்கக் கூட முடியாதுதான். ஒரு வருடம் என்றால் எவ்வளவு என்பதனை சிறிதாக நினைவூட்டவே ‘சங்கரா, சங்கரா’ என்ற தத்துவம் இங்கே சொன்னது, யாருக்கும் திகிலூட்ட அல்ல.

      (சட்டத்தின் தராசுபடி) குற்றம் செய்துவிட்டு, பிள்ளைகுட்டிகளை எல்லாம் விலகி ஒரு வருஷம் சிறைக்குச் செல்பவன், ‘இதோ, ஒரு வருசம் என்பது கண்மூடி கண்திறக்கும் முன்னாடி மளமளவென்று போய்விடும்’ என்று ஆறுதல் செய்துகொண்டு செல்லுவான். ஆனால், உயிர் போவதற்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன என்று டாக்டர் நாள் குறித்த பின், புற்றுநோயால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு, காலத்தின் அருமை, வாழ்க்கையின் மகிமை எல்லாமே புதிதாக தெரியும். அய்யோ, போதுமான அளவுக்கு லைஃப் இன்சூரன்சு கூட எடுக்காமல் பிள்ளைகுட்டிகளை அம்போ என்று நடுத்தெருவில் விட்டுச்செல்கிறேனே என்று அப்போது தான் தவறை உணர்வான்.

      அந்த வகையில் ஒரு வருடம் என்றால் என்ன என்பதை நினைவூட்டும் வகையில், ரங்கபாஷ்யம் குழுவினரின் முதல் மடலை அடுத்து பிரசுரிக்கின்றேன். tamil.net archives களில், நிறைய மடல்கள் விட்டுப்போயுள்ளன. மேலும் அவற்றில் search போன்றவை எல்லாம் இல்லாததால், எங்கள் குழுவினரின் மடல்களையும் மற்ற நண்பர்களின் பரிமாற்றங்களையும் நேரம் கிடைக்கும்போது தொகுத்து, ஒரு வலைப்புலத்தில் இடலாமா? என யோசித்து வருகின்றேன். அதுவரையிலும், எங்களது குறிப்பிட்ட சில மடல்களையும், அவை சார்ந்த மற்ற நண்பர்களின் மடல்களையும் அவ்வப்போது மறுபிரசுரம் செய்ய உத்தேசித்துள்ளேன். இதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லையென்றால், தயக்கமின்றி கருத்துச் சொல்லவும்.

      மேலும் ஒரு விசயம்:

      எது இன்ட்டர்நெட் அடிக்ஷன், எது இல்லை என்று ஒருவரிடம் சொல்லும்போது, கூடவே How will you know When you are in denial, When you are not? என்பதையும் சொல்லவேண்டும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தத்துவத்தை நினைவுகூரும் போது, நம் பிள்ளை, குட்டிகளின் வாழ்க்கையும் இனிமையாக வாழ்வதற்கே என்பதையும் உடன் மனத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வெட்கப்படாமல் சொந்த வாழ்க்கையை அலசி, சுகமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும். எப்போதும் பொதுவாக காமெடியே எழுதும் எங்கள் குழுவினர், இங்குள்ள களேபரத்தில் அவ்வப்போது உங்கள் காதில் உரிமையுடன் சங்கும் ஊதிச் செல்வதை பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

      என்றென்றும் உங்கள் அன்பையும் நட்பையும் நாடும்

      அன்பன்
      ரங்கண்ணா ராமன்


      12. No Subject :: ரங்கபாஷ்யம்

      அநேக நமஸ்காரம்.

      இணையத்தில் எல்லோரும் எப்படி இருக்கின்றீர்கள்? இப்பவும் பகவத் க்ருபையாலும் ஸ்ரீ ஆசார்யாள் அனுக்ரஹத்தாலும், பார்த்தசாரதி, மாட்டுப்பொண்ணு சம்பாத்தியத்தினாலும் எனக்கு வாழ்க்கை ஒரு குறையும் இல்லாமல் நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

      இன்னக்கி தலைப்பு வந்து தங்கமலை ரகசியம். தங்கமலையைப்பற்றி உங்களில் நிறையப் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அப்போது நீங்கள் சிறுவர்கள். தமிழ் அரசன், சுலைமான், லோகநாதன் போன்ற இளைஞர்கள் பிறந்திருக்கவேயில்லை. ‘லோக’த்தில் ஆணவ மலங்களும் கொஞ்சம் குறைவே.

      கிருஷ்ணவேணியின் பெரியப்பா அனந்தாச்சாரிக்கு சொந்தமானது தங்கமலை. ஆறுபடையப்பனின் கிரானைட் மலைக்கு அருகாமையில் உள்ளது. தங்கமலை முழுதும் தங்கப்பாறைகள் மயம்தான். தங்கப்பாறைகளை டைனமைட்டினால் தகர்த்தெடுத்து, வடிவாகக் கூறுபோட்டு, சுண்ணாம்பில் காவி கலந்து சாயம் பூசி, கள்ளக்கடத்தல்காரர்களின் மூலம் வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு விற்று ஏற்றுமதி செய்துவிடுவார்.

      பக்கத்தில் உள்ள கிடாமலை எஸ்டேட்டில், ஏற்கனவே இருந்த தேயிலைத் தோட்டங்களை அழித்துவிட்டு கஞ்சாச்செடிகள் பயிரிட்டு, கொழுத்த லாப ருசி கண்டவராயிற்றே! சர்க்கார் ஆபீசர்கள் வந்தால், கிடாமலை எஸ்டேட்டில் உள்ள கெஸ்ட்ஹவுசில் ஸ்பெஷல் பார்ட்டி தடபுடலாக நடத்தி, சன்மானமும் கொடுத்து அனுப்பிவிடுவார். அதனால் சர்க்காரிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.

      தமிழ்சினிமாக் காரர்கள் சூட்டிங் செய்வதற்காக ஒருமுறை தங்கமலைக்கு வந்திருந்தார்கள். தங்கமலையில் தங்கப்பாறைகள் உற்பத்தி செய்து கடத்தல் செய்வது வெளியே யாருக்கும் தெரியாத ரகசியம். இந்த ரகசியம் குடும்பத்தை விட்டு யாருக்கும் வெளியே தெரியக்கூடாது என்று அனந்தாச்சாரி கண்டிசனான உத்தரவு போட்டு இருந்தார். அனந்தாச்சாரியாரைப் பார்க்கவே பயமாக இருக்கும். நல்ல பவுன் கலரில், கம்பீரமான உருவம். எடுப்பான மூக்கு. தூக்கித் துருத்திக் கொண்டு ‘உள்ளேன் அய்யா’ சொல்லும் காதுகள். பார்ப்பதற்கு ஜூலியஸ் சீசர் மாதிரியே இருப்பார். எங்கள் வம்சாவளி அப்படி.

      கிருஷ்ணவேணி அப்போது விவரம் தெரியாத (இப்போதும் கூட அபிஷ்ட்டுதான்) சிறுமி. பட்டுப்பாவாடையும், ரெட்டைச்சடையுமாக காமராவையும், சினிமாக்காரர்களையும் சுற்றி சுற்றி ஆவலுடன் வந்து கொண்டிருந்தாள். அந்த சினிமாவுக்கு கதை வசன கருத்தன், ஏதோ தென்மாவட்டத்தைச் சேர்ந்த வறண்ட கிராமத்தான். இந்த வசன கருத்தன், மிட்டாயும், அதே மாதிரி இனிப்பான பேச்சும் கொடுத்து கிருஷ்ணவேணியை சிநேகம் பிடித்துக்கொண்டான்.

      கிருஷ்ணவேணியின் அந்த அறியாப்பருவத்தில், அப்பாவிப்பிஞ்சு உள்ளத்தில், தங்கப்பாறைகளைப் பற்றிய ரகசியத்தை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. ரகசியத்தை அறியவந்ததும், வசனகருத்தனுக்கு, ரெண்டு நாட்களுக்கு நித்திரையோ, இருப்போ கொள்ளவில்லை. ரகசியத்தை நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையும் வயிறும் வெடித்துவிடும் போல இருந்தது. தனது சொந்த அனுபவத்தையே கதையாக எழுதி காமெடி சீன் மாதிரி சேர்ப்பது பற்றி யோசிக்கத் துவங்கினான்.

      அப்படித்தான் ஆரம்பமானது, அனந்தாச்சாரியின் காதுகளைப் போலவே ராஜாவுக்கும் கழுதைக்காதுகளாகப் படைத்தான். எப்போதும் தலைப்பாகையை கொஞ்சம் இறக்கிக்கட்டி, காதுகளின் ரகசியத்தைக் கட்டிக்காத்து வந்த ராஜா ஒருநாள் தலைப்பாகை இல்லாமலேயே தவறுதலாக அந்தப்புரத்துக்குள் நுழைந்து, வேலைக்காரியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகிறார். அப்புறம் வேலைக்காரிக்கும் தலையும் வயிறும் உப்பி, மன உபாதை கூடிவருகின்றது. பின்னர் பைத்திய வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம், ஒரு உபாயத்தை பரிகாரம் சொல்கின்றார்கள்.

      உபாயத்தின்படி, ஊருக்கு வெளியே பாதாளமாக ஒரு குழி வெட்டி வேலைக்காரி குழியில் எட்டிப்பார்த்து, ‘ராஜாக் காது கழுதைக் காது, ராஜாக் காது கழுதைக் காது’ என்று ஆசைதீர உரக்க, தலையும் வயிறும் திரும்பவும் நார்மல் லெவலுக்கு சுருங்கும்வரை, கக்கியும், கத்தியும், நிம்மதியும் சுகமும் அடையப்பெறுவாள். இந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்து படத்துக்கு தங்கமலை ரகசியம் என்று பெயரும் மாற்றம் செய்து திரையிட்டார்கள். படமும் ஓகோ என்று ஓடி ஜமாய்த்தது.

      இதை எல்லாம் ஏன் சொல்ல வருகின்றேன் என்றால், நமது சிநேகிதர் தமிழ் அரசருக்கும் பத்தியமில்லா, பைத்திய வைத்தியம் ஒன்று கைவசம் வைத்திருக்கின்றேன். தமிழ் இணையம் இப்போதைக்கு ஒரு unmoderated single topic list ஆக இருக்கின்றது. இது ஒரு புறம்போக்கு பூமி. யார் வேண்டுமானாலும் உழுதுவிட்டுப் போகலாம். விரைவில் இதற்கு ஒரு வழி பார்ப்போம். நல்ல நேரம் கூடிவரும்போது, எல்லோருக்கும் தனித்தனியாக egroups ஸ்டைலில் ஆளுக்கொரு லிஸ்ட் கொடுத்து விடுவோம்.

      தமிழ் அரசனுக்கு, பார்ப்பான்-bashing.com என்ற பெயரில் ஒரு வெப்சைட்டும், ஒரு லிஸ்ட்டும் அன்பளித்து விடுவோம். அத்துடன் TamilBot என்று ஒரு artificial intelligence software உம் கொடுக்கலாம்.

      அது உலகமுழுக்க உள்ள தமிழ்சைட்டுகளை தேடிச்சென்று, பக்கங்களை parse, syntax, semantic வேலைகள் எல்லாம் செய்து, பக்கங்களின் உட்கருத்துக்களை அறிந்து ஏதேனும் பார்ப்பன சதிகள் வேலை செய்கின்றனவா என்று ஆராய்ந்து உடனுக்குடன் ரிப்போர்ட் செய்யும். தமிழ் அரசனின் வேலையும் மிக சுலபமாகிவிடும். ரிப்போர்ட் வந்தவுடன், அவர் ஆசை தீரும்வரை பார்ப்பனர்களுக்கு அர்ச்சனை போட்டு, மண்டை சுருங்கி, வையத்துள் வாழ்வாங்கு, மண்டை போடும்வரை வாழ்வார்.

      எம்பெருமான் திருவருள் அரசருக்கு எப்போதுமே உண்டு.

      அடியேன்
      ரங்கபாஷ்யம்


      13. தொண்டரடிப் பொடியன் ரங்கண்ணா ராமன்

      ரங்கபாஷ்யம் குழுவினருக்கு வயதாகிக் கொண்டே வருவதால் ஏற்படும் தளர்ச்சியை என்ன பாடுபட்டாலும், மறைக்க முடியவில்லை. எழுதும் எழுத்தில் கிழத்தன்மை தென்பட்டாலும் கூட, ஆணவமலங்களாலும் அலைகள்போல சீறிப்பாயும் புலால் கனவுகளாலும் ஏதோ கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடிகின்றது. இருந்தாலும், இதுவே சாசுவதமாக இருக்கமுடியுமா? எனக்குப் பின்னர் இணையத்தில் யார் என்ற கவலைகள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தன. கோமாளித்தனத்தில், தர்பாரில் எனக்கிணையாக எவரும் உண்டோ? என்று ரொம்பவே இறுமாப்புக் கொண்டிருந்தேன்.

      எனது கவலையைத் தணிப்பதற்கென்றே, முனீஸ்வரரே பார்த்து நண்பர் அம்ப்ரோஸ் செபஸ்தியானை அனுப்பிவைத்திருக்கின்றார். இனிமேல் தத்துவராயரும் அம்ப்ரோஸும் நடத்தும் கலைநிகழ்ச்சிகளே இணையத்தைக் கட்டுக்குலையாமல் சுவாரஸ்யமாக கொண்டுசெல்லும் என்று நான் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

      உண்மையிலேயே சொல்லுகிறேன், இப்போது எனக்கு நன்றாகவே சுகமாக, ரிலாக்ஸ்டாக உள்ளது. நகைச்சுவையைப் பற்றி எனது அனுபவங்களை சற்றுப் பகிர்ந்துகொள்ள இது நல்ல நேரம்.

      தமிழ் இணையத்திற்கு வந்தபின்னர் தான் எனக்கு நிறைய சுகமான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றன. முதலில் தமிழில் மீண்டும் எழுதுவதை (அன்புள்ள அம்மா, அப்பா அவர்களுக்கு நலம், நலமறிய அவா, என்றெழுதிகூட நீண்ட வருடங்கள் ஆகியுள்ளன) தூசிதட்ட முடிந்துள்ளது. தமிழ்ப்பத்திரிக்கைகள் படித்தே வெகுவருடங்கள் ஆகிவிட்டன. எப்பொழுதாவது நண்பர்கள் வீட்டில் coffee table இல் குமுதமோ, விகடனோ பார்த்தால் நாலைந்து பக்கங்கள் புரட்டிப் பார்ப்பேன், அவ்வளவுதான். பள்ளிக்கூடத்தில் தமிழ்ப்பாடத்தில், இலக்கணம், செய்யுள் எல்லாம் படித்து, கட்டுரைகள் எழுதியதுதான். தமிழில் தனி ஆர்வம் என்று அப்போது எதுவும் கிடையாது.

      மிகவும் மோசமான வீடியோக்களே கிடைத்துவந்ததாலும், படவிமரிசனங்கள் கிடைக்காததாலும் (சில தடவைகள் கடைச்சொந்தக்காரன் – குஜராத்திக் காரன் – சிபாரிசை நம்பியே கேஸ்ஸட் எடுத்து வந்திருக்கின்றேன்), தமிழ்ப் படங்கள் பார்த்ததும் மிகக்குறைவு. மேலும், மற்ற பல விசயங்கள் என்னை பிஸியாக வைத்திருந்ததாலும், தமிழ் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஓரளவிற்குத்தான் நாட்டம் கொள்ளமுடிந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக, தியேட்டருக்கு சென்று தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கின்றேன். என் பின்னணி மாதிரி, இணையத்தில் உள்ள கணிசமானப் பேர்களுக்கும் பொருந்திவரும் என்று தெரியும்.

      மற்றபடி நகைச்சுவையாக எழுதும்போது, எப்போதுமே sarcasm ஒரு பங்கு கலந்துதான் எழுதுவேன். நவரசங்களைப் போல அதுவும் ஒருவகை நகையுணர்வுதானே. இருப்பினும் அடுத்த மனிதர்களின் உணர்வுகளை மனத்தில் வைத்துக்கொண்டு, கணக்கிட்டுத்தான் sarcasm கலக்க முயற்சிப்பேன். சில நேரங்களில் ஆர்வமிகுதியில் judgemental error செய்ய வாய்ப்பிருக்கின்றது. ஆனால், இணையத்தவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் ரசிக்கக் (சகிக்க?) கற்றுக்கொண்டார்கள்.

      சிலருக்கு நகைச்சுவையாக எழுதுவது என்பது சமையல் மாதிரி இயல்பாக நன்றாக வரும். இன்னும் சிலர் cookbook – சமையல் குறிப்பு புஸ்தகங்கள் மாதிரி கைவசம் இருந்தால், அதைப்படித்து சிறப்பாக செய்வர். நான் இரண்டாம் வகை. உணர்ச்சிகள் என்றால் என்ன புத்தகத்தில் படித்துப்பார்த்து விட்டு, manual க்கு ஏற்ற மாதிரி நகைச்சுவை எழுதுகிறேன். எப்படியோ ஒரு வழியாக சட்டியில் பண்டம் நிரம்பி அகப் பைக்கு, அதுதான் உங்கள் மனப் பைக்கு, சுவையாக வந்தால் சரிதான்.

      யார் வேண்டுமானாலும் நகைச்சுவையாக எழுதலாம், அட்லீஸ்ட் எழுத முயலவாவது செய்யலாம் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணமே. மற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை நான் அவ்வளவாகப் படித்ததில்லை. ஆனால், அது எந்த விதத்திலும் என்னை ஊனனாக்க வில்லை. புனைபெயரில் எழுதுவது நிச்சயம் உதவியது. மேடைக்கூச்சம் போல, எழுத்துக்கூச்சத்தைத் தவிர்க்க நிறைய கைகொடுத்தது.

      நிறைய புத்தகங்கள் படிப்பவனோ, வாழ்க்கை நுணுக்கங்களைக் கூர்ந்து கவனிப்பவனோ நானல்ல. அங்கங்கே, அவ்வப்போது உதிரியாக சேகரித்துக் கொண்டவைதாம் எல்லாம். திரு கண்ணன் அவர்கள் ஒருமுறை சொல்லி இருந்தார், இந்த ரங்கபாஷ்யக் குழு ஏதோ நிழல்வெளிப் பரிசோதனை செய்வதுபோல உணர்கிறேன் என்று. ஒரு விதத்தில் அது உண்மைதான். Pushing the limits – ஒரு சாமானியன் எந்த அளவிற்கு, எல்லாம் தெரிந்த ஒரு மாயாஜாலக் கில்லாடி மாதிரி பாவலா செய்யமுடியும், அதுவும் எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும் என்று பார்ப்பதே ஒரு பரிசோதனையோ என்னவோ.

      எல்லாமே ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும். திடீரென்று ஒருநாள் அகஸ்த்துமாத்தாக கமிஷனர் கொடுக்கும் சமிக்ஞையினால், பூபதி என்னை பிடித்துப்போட்டு, எக்குத்தப்பாக கழுவேற்றலாம். அல்லது, நான் செய்யும் சஸ்பென்ஸ் எனக்கே தாங்காமல், வயிறு உப்பி வெடிக்கும்முன்னர் நானே வெளிச்சத்தில் குதிக்க நேரிடலாம். எல்லாமே ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும். திடீரென்று யாருக்கும் சொல்லிக்காமல் கொள்ளாமல், முன் அபாய அறிவுப்பு எதுவும் இல்லாமல், யார் என்ன என்ற எந்த மர்மமும் விடுபடாமலேயே, ரங்கபாஷ்யக் குழு எழுதுவதை நிறுத்திவிட்டால், ரங்கபாஷ்யக் குழு செத்துக்கூடப் போயிருக்கலாம்.

      சாவைப் பற்றி சொன்னதும் என்ன, நெஞ்சம் கனக்கிறதா? கவலைப் படாதீர்கள். ரங்கபாஷ்யம் ஒருவிதத்தில் சாகாவரம் பெற்றவன். அம்ப்ரோஸ் செபஸ்தியானிடம் எனது ஹாட்மெயிலின் (சுடுவஞ்சல்) பாஸ்வர்டு கொடுத்துவிட்டுத் தான் சாவேன். நான் செத்தது யாருக்குமே வெளியே தெரியாமல், அம்ப்ரோஸ் அவர்கள், முனீஸ்வரன் – சனீஸ்வரன் சகோதரர்களின் ஆசியுடன், ஸ்மூத்தாக ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாதவகையில் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்வார்.

      நான் ஆடாவிட்டாலும், என் பேய் வந்து ஆடும்.

      பேயாழ்வாரின் திருவருள் எல்லோர்க்கும் நிச்சயம் உண்டு.

      அடியேன்,
      விசேஷ நிருபன்
      தொண்டரடிப் பொடியன் ரங்கண்ணா ராமன்


      14. பேரன்புள்ள இணைய நண்பர்களே,

      முதற்கண் எனது வணக்கம்.

      நான் இன்று வந்ததற்கு முக்கிய காரணம் உண்டு. ‘ரங்கபாஷ்யக் குழுவினர்’ இணையத்தில் எழுத ஆரம்பித்து இத்துடன் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. என் வாழ்க்கையின் மற்ற அனுபவங்களைப் போல என் இணையப் பங்கேற்பும் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. நான் ஒருமுறை சொல்லியிருந்தேன், வாழ்க்கையில் எதுவுமே ஒருநேரம் முடிவுக்கு வரத்தான் செய்யும் என்று. நான் தமிழிணையத்தில் எழுதும் படலமும் அந்த நேரத்தை நெருங்கிவிட்டது. ஏனெனில், வேறு அனுபவங்களை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.

      நான் அநாமதேயமாக எழுதிவந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், பயமோ சங்கோஜமோ நிச்சயம் காரணம் இல்லை. நான் தப்பான அபிப்பிராயங்கள் சொல்ல நேர்ந்து, அதற்கு சொந்தக்காரன் என்று முத்திரை குத்திவிடுவார்களே என்ற கூச்சம் ஒன்றும் கிடையாது. Vocabulary, sentence-structuring, white space and paragraph formatting, style எல்லாம் மாதிரியே anonymity was also part of the design.

      நான் யார், எனது ஊர், பேர், தொழில், முகம் என்று எதுவுமே தெரியாத வகையில் எனது கதாபாத்திரங்களுக்கு ஒரு உயிரோட்டம் இருக்கின்றது. ‘வெட்டியாப் போனவனை’ அவனது எழுத்துக்கள் மூலம் மாத்திரமே அறிந்திருப்பவர்களுக்கு அவனுக்கு கண், காது, மூக்கு எல்லாம் அமைத்து குரல் ஏற்ற, இறக்கங்கள் கூட கொடுத்து உயிர்கொடுக்க முடிகின்றது. வெட்டியாப் போனவன், பேசும்போது எப்படி முந்திரிக்கொட்டை மாதிரி நறுக்,நறுக்கென்று, என்ன மாதிரி குரலில் பேசுவான் என்று எல்லோரும் உருவகப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள். இது எனது வேலையைச் சுலபமாக்குகின்றது.

      நான் யார் என்ற விவரங்கள் தெரிந்தபின்னர் கூட, நமது இணைய அன்பர்கள் சிலர் பொறுமையுடன் ரகசியம் காத்தனர். I thank them, for being a good sport. நான் யார், முகவரி என்ன என்பது போன்ற விசயங்களை அறிவிக்காமலேதான், இணையத்தில் எழுதத்துவங்கினேன். அதேமாதிரி பிரிந்தால்தான் நலமாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆனால், அது முறையாகுமா என்பது என்றும் கேள்விக்குரியதே. விலகும்போதாவது நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு விலகுவதுதான் முறை என்று சில பேர் கருத்துக் கொண்டிருப்பர். அதுகுறித்து நேரம் வரும்போது மறுபரிசீலனை செய்வேன்.

      எல்லா மனிதர்களிடமும் குறைகள் உள்ளன. இதனை மனத்தில் இருத்திக் கொண்டு, வீட்டிலும் அலுவலகத்திலும், நண்பர்கள் மத்தியிலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமை ஓங்கியே இருக்கும். அன்பர்கள் உங்களது எல்லோருடைய வாழ்க்கையும் வளமான எதிர்காலம் கொண்டதாக அமைய எனது வாழ்த்துக்கள்.

      கடந்த ஒன்பது மாதங்களாக உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து கலகலப்பு ஊட்டி, உங்களது வாழ்க்கையின் அங்கமாக ஒன்றிப்போய்விட்ட

      1. சராசரிக் குப்பன்
      2. வெட்டியாப் போனவன்
      3. ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்
      4. சர்க்கஸ் வளையாபதி
      5. துப்பாக்கி நாயக்கர்
      6. பார்த்தசாரதி
      7. கிருஷ்ணவேணி
      8. சாந்தி தங்கராஜன்
      9. S. அண்ணாமலை
      10. பாதாம்ஸ்ரீ பத்மா
      11. துட்டுமி சான்
      12. தகர டப்பா
      13. மணி சுவாமிநாதன்

      ஆகிய முகமூடி அணிந்த நிழல்வெளி மனிதர்களை நீங்கள் மாத்திரம் அல்ல, இந்த சாதாரணனும் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.

      இந்த நிழல்வெளி மனிதர்களை மிகுந்த சிரமத்துடனும், கனத்த நெஞ்சுடனும் ஈரக் கண்களுடனும் தான் உங்களிடம் இருந்து பிரிக்க வேண்டியிருக்கிறது.

      அதற்காக உங்கள் மன்னிப்பைக் கோரும், இன்னோரு நிழல்வெளி நண்பன்,

      உங்கள் விசேஷ நிருபன்

      ரங்கண்ணா ராமன்


      மூன்று :: Krishnan

      In Blogs, Lists, Misc on ஜூலை 21, 2009 at 9:16 பிப

      1. சத்து , சித்து , ஆனந்தம்.
      2. ஆக்கல் , அளித்தல் , ஒடுக்குதல்.
      3. வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம்.
      4. இச்சாசக்தி , கிரியாசக்தி , ஞானசக்தி.
      5. இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம்.
      6. ஆற்றுநீர் , ஊற்றுநீர், மழைநீர் [முந்நீர்]
      7. அயன் , அரி ,அரன்.
      8. ஆன்மதத்துவம், வித்தியாதத்துவம், சிவத்தத்துவம்.
      9. பாசஞானம் , பசுஞானம், பதிஞானம்.
      10. இதிகாசம் மூன்று : சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம்.
      11. அக்கினி மூன்று : ஆகவானீயம் , காருகபத்யம் , தாட்சிணாக்கியம்.
      12. மண் ,பொன்,பெண்.
      13. பதி ,பசு , பாசம்.
      14. ஆணவம், கன்மம், மாயை.
      15. [முப்பால் ] அறம், பொருள், இன்பம்.
      16. இயல் ,இசை, நாடகம்
      17. தூலம் ,சூக்குமம்,கரணம்.
      18. மூலம், நடு, முடிவு.
      19. சாத்துவம்,ராசஸம், தாமஸம்.
      20. இகம், பரம், வீடு.
      21. தொகை, வகை,விரி.
      22. முதனூல்,வழிநூல், சார்புநூல்.
      விட்டுப்போன சில மூன்றுகள்:
      
      சுவீட், காரம், காப்பி
      அதன் பின்னர் வரும்,
      கபம், வாதம், பித்தம்
      
      நாலான சில மூன்றுகள்:
      
      >வேதம் மூன்று : இருக்கு , யஜுர் , சாமம்.
      >
      
      எனது பக்கத்து வீட்டு திரிவேதி, அதர்வணம் தெரிந்த ஒரு சதுர்வேதி எமகாதகன்.
      
      >இறந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம்.
      >
      
      இத்துடன் நல்லகாலம் என்றும் ஒன்று வருது என்று இணையத்து குடுகுடுப்பாண்டி
      ஒருமுறை சொன்னதாக ஞாபகம்.
      
      உலக அமைதிக்காகப் பாடுபடும்
      சாந்த சொரூபன் தகர டப்பா

      அந்தக் கால விகடன் விமர்சனம்: 9 சப்ஜெக்ட்

      In Magazines, Movies on ஏப்ரல் 9, 2009 at 3:42 முப

      திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்

      100க்கு

      1. டைரக்சன்: எஸ் பி முத்துராமன் –> 55
      2. கதை: பஞ்சு அருணாசலம் –> 35
      3. வசனம்: பஞ்சு அருணாசலம் –> 35
      4. நடிப்பு: கவிதா – 50 & முத்துராமன் – 40 –> 45
      5. காமிரா: பாபு –> 65
      6. இசை: இளையராஜா –> 40
      7. எடிட்டிங்: ஆர் விட்டல் –> 45
      8. வண்ணம்: ஜெமினி கலர் லாபரேட்டரி –> 60
      9. தயாரிப்பு: எஸ் பாஸ்கர் –> 50

      மொத்தம் → 430

      கதையோடு ஒத்துப் போகாத க்ளைமாக்ஸ் காட்சிக்காக (குறைப்பு) -25

      ஆக மொத்தம்  → 405/900

      காற்றினிலே வரும் கீதம் - அந்தக் கால ஆனந்த விகடன் திரை விமர்சனம் (1978)

      காற்றினிலே வரும் கீதம் - அந்தக் கால ஆனந்த விகடன் திரை விமர்சனம் (1978)

      Tamil Blogs Top 10: 2004

      In Blogs on மார்ச் 13, 2009 at 10:02 பிப

      இது இந்த மாசப் பட்டியல்: March 10: Top 10 Tamil Blogs « 10 Hot

      2004ல்?

      அனைத்து சுட்டிகளும் பழைய வலையகத்தைக் குறிப்பதால் இயங்காமல் இருக்கலாம். அந்தக் காலத்திற்கான முழுப் பட்டியல்.

      ராயர் காப்பி கிளப் – பத்து மடல்

      In Literature, Misc on பிப்ரவரி 26, 2009 at 5:50 பிப

      நன்றி: ராயர் காபி க்ளப்

      1. இரா முருகன்

      பழைய காலத்தில் சாங்கோபாங்கமாகக் கதை எழுதினார்கள் என்பது பெரும்பாலும் உண்மை என்றாலும், அப்போதே சொற்சிக்கனமும் சிறுகதைக்குள் வந்து விட்டது. கு.ப.ராவின் ‘விடியுமா?’ கதையை உதாரணத்துக்குச் சொல்லலாம்.

      வெற்றி பெரும் கதைகளில் கதையம்சத்தோடு செய்நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும். Craft அசிங்கமான விஷயம் இல்லை. கதைக்குள் வாசகனை / வாசகியை இழுக்க, லயிப்பைத் தக்க வைக்க இது அவசியம் தேவைப்படுகிறது.

      “க்ரிகோர் சமசா காலையில் கண் விழித்து எழுந்தபோது ஒரு பூச்சியாக மாறியிருந்தான்” என்று காப்கா ‘மெட்டமார்·பஸிஸ்’ கதையைத் தொடங்குவார். சர்ரியலிசக்கதை அது. உருவம், உத்தி, உள்ளடக்கம் எல்லாம் அப்புறம். அந்த ஆரம்பமே கதைக்குள் நுழையத் தூண்டுகிறது பாருங்கள் – அதுதான் முக்கியம்.

      கதை முடிந்த பிறகும் எழுத்து நீண்டு கொண்டே போவது வெற்றி பெற்ற சிறுகதையில் இருக்காது. எங்கே தொடங்குவது என்பதைத் தெரிந்து கொள்வதைப்போல் எங்கே முடிப்பது என்பதும் முக்கியம்.

      ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது –

      உத்தராயணம்‘ என்று ஒரு சிறுகதை எழுதினேன் (சுபமங்களா). ரேடியோ ரிப்பேர் செய்யும் ஒரு வயதான அய்யருக்குச் சினிமாவில் பாதிரி வேடத்தில் நடிக்க ஒருநாள் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவருடைய அந்த நாளின் அனுபவங்கள் தான் கதை.

      “குளத்து ஐயர் அங்கியை மாட்டிக் கொண்டார்” என்று கதையைத் தொடங்கி இருந்தேன்.

      நண்பர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார், “அங்கேயே கதை முடிஞ்சு போயிடுச்சு”

      சிக்கல் இங்கேதான். ராமகிருஷ்ணனுக்கு அந்த ஒற்றை வாக்கியத்தில் தெரியும் முரணில் முழுக்கதையும் கிடைத்து விட்டது. எல்லோருக்கும் அந்த அனுபவம் ஏற்படுமா?

      நல்ல கதையை எழுத விடியல்காலையில் வென்னீரில் குளித்து லுங்கியும் ஈரத்துண்டுமாகத் தலையைத் துவட்டாமல் மேற்கு நோக்கி உட்கார்ந்து க, ந, மா என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் வழிமுறை இல்லை.

      கதை மனதில் தட்டுப்படும்போது எங்கேயாவது ஒரு வரி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். (ஆபீஸ் ·பைலில் இல்லை). எழுதக் கை வரும்போது எதை எழுதலாம் என்று மோட்டுவளையைப் பார்க்க வேண்டியது இல்லை. பாக்கெட் நோட்புத்தகத்தையோ, உள்ளங்கைக் கணினியையோ பார்த்தால் போதும்.

      மனதில் கதை – குறைந்த பட்சம் ஒரு சுமாரான தோற்றமாவது இல்லாமல் எழுத உட்காராதீர்கள்.

      எழுதிய கதையை ஒரு நாளாவது இடைவெளி விட்டு, முதல் வாசகனாகப் படியுங்கள். அதை எழுதிய எழுத்தாளனாகப் படிக்காதீர்கள். கதையே மாறலாம்.

      இனி எழுதுவதில் ஏற்படும் சின்னச் சங்கடம் பற்றி –

      பழைய கால எழுத்தாளனுக்கு இல்லாத (அவர்களுக்கும் இருந்ததா என்று யாரைக் கேட்டால் தெரியும்? முதுபெரும் எழுத்தாளர் சிட்டியை?) ஒரு சங்கடம் இப்போது எழுதுகிறவர்களுக்கு உண்டு. எழுத உட்காரும்போதே இத்தனை பக்கத்துக்கு மேல் போகக்கூடாது என்பது மனதின் பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கும். பத்திரிகையில் பல விஷயங்களும் இடம்பெற வேண்டியிருப்பதால், சிறுகதைக்கும் பக்க அளவை நிச்சயிக்க வேண்டியிருக்கிறது.

      ஒரு இரண்டு வருடம் போல் முழுக்க இலக்கிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவிட்டுப் பிரபலமான பத்திரிகைகளுக்குத் திரும்ப வந்தபோது, கை தன்பாட்டில் கம்ப்யூட்டர் கீ போர்டில் அடித்துக் கொண்டே போக, கதையை (இதுவும் சாப்ட் காப்பிதான் மின்னஞ்சலில் அனுப்புவது) கம்போஸ் செய்த கம்பாசிட்டர் ஆசிரியரிடம் கேட்டாராம் ” என்ன சார்.. இதைத் தொடர்கதையாப் போடப் போறீங்களா?”.

      இப்போது எழுதும்போது எம்.எஸ் வேர்ட் கோப்பில் மூன்று பக்கத்துக்கு மேல் (10 பாயிண்ட் எழுத்து) போகக் கூடாது என்பதில் தான் பாதிக் கவனம் போகிறது. அப்போது தான் பத்திரிகை சைசில் ஆறு பக்கத்துக்குள் அடங்கும் (படம், துணுக்கு பிரசுரித்த இடம் போக).

      ‘கொஞ்சம் நீளமான சிறுகதை’ என்று விகடனில் செய்தார்கள். குறுநாவலுக்கும், ஆறு பக்கச் சிறுகதைக்கும் இடைப்பட்ட சில கதைகள் அதிகச் சேதாரம் இல்லாமல் படிக்கக் கிடைத்தன. இதை அவ்வப்போது மற்றப் பத்திரிகைகளும் செய்தால், கதையின் நீளத்தைப் பற்றி அனாவசியமாகக் கவலைப்படாமல் எழுதிக்கொண்டு போகலாம். அதில் ஏதாவது ‘வளவள’ இருந்தால் பத்திரிகை ஆசிரியரின் கத்திரிக்கோல் அதிகாரம் இருக்கவே இருக்கிறது.

      ~oOo~

      2. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

      சினிமாவும் நவீன இலக்கியத்தில் ஒரு மிக முக்கியமான அங்கம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், தற்கால சினிமா மற்ற இலக்கிய அங்கங்களைக் கூட தூக்கிச் சாப்பிட்டு விடுமளவுக்கு நாடு, மொழிகள், கலாச்சாரங்கள் கடந்த அசுர வளர்ச்சி பெற்றுள்ளதை நாமெல்லோருமே நன்கறிவோம்.

      ஒரே ஒரு சின்னத் திருப்பம்.

      ராயர் காப்பி கிளப் அரட்டையில் சினிமா பற்றிய -‘ஓ போடு’, ‘சிம்ரன்-கமல்’, ‘பாபா-விஜயகாந்த்’ எல்லாம் தாண்டிய-, நல்ல சினிமா, எடுக்கும் விதம், சில பல டெக்னிக்குகள் பற்றி இங்கே பேசலாமா இந்த இழையில்?

      நேற்று, Lawrence Kasdan-ன் ‘Body Heat’ கேபிளில் பார்த்தேன். ’81-ல் முதலில் பார்த்தது. அப்போழுது எனக்கு இரண்டாவது அமெரிக்க விஜயம். அமெரிக்காவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. (இன்னமும் பிடிக்காதது வேறு விஷயம்.) அண்ணனுடன் பார்த்தபொழுது, அந்தப் படத்தின் அதீத செக்ஸ் காட்சிகள் எங்களை நெளிய வைத்ததும் உண்மை. வில்லியம் ஹர்ட்டையும் காத்லீன் டர்னரையும் அப்புறம் எத்தனையோ படங்களில் எப்பட் எப்படியெல்லாமோ பார்த்தாயிற்று.

      ஒரு இருபது வருடங்கள் கழித்து, சினிமா விவகாரங்களில் கொஞ்சம் மெச்சூரிட்டியோடு அதே படத்தைப் பார்த்தபோது, அந்தப் படத்தின் க்ளாசிக் டச் வெளிப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் என் ரசிகத்தன்மை, knowledge of movie making and technology இம்ப்ரூவ் ஆகியிருப்பது ஒரு முக்கியக் காரணம்.

      படம் சஸ்பென்ஸ் த்ரில்லர். ஹிட்ச்காக் தரத்துக்கு எடுக்கப்பட்டது. படத்தைப் பார்க்காத நண்பர்களுக்காக கதை பற்றிய ஒரு சின்னக் கதை: ·ப்ளாரிடா பக்கமாக ஒரு சின்ன டவுன். சென்னை மாதிரி அனல் வெய்யில், வியர்வை, புழுக்கம். தூக்கம் வராமல் எல்லோருமே தவிக்கிறார்கள். ஹீரோ ஒரு சொதப்பலான வக்கீல். அவ்வளவாக ஒழுக்கமில்லாத உலக்கைக் கொழுந்து. தன் கணவனைக் கொல்வதற்காகவும், சொத்துக்களை அப்படியே ‘ஸ்வாஹா’ பண்ணுவதற்காகவும் ஒரு பொம்பளை அவனை எப்படி யூஸ் பண்ணிக் கொள்ளுகிறாள் என்பதே கதை. சஸ்பென்சை வெள்ளி அல்லது சனி வீட்டுத் திரையில் காண்க. ஏடாகூடமான காட்சிகள் உண்டு. மாமிகளிடம் மாட்டிக்கொண்டு என்னை மாட்டி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் கலைக் கண்ணோடு பாற்கிறவன்.

      படம் ஆரம்பத்தின் முதல் ·ப்ரேமிலிருந்து படத்தின் ஜீவநாடி கணிக்கப்பட்டு விடுகிறது. முதல் பத்து டிஸால்வ்களிலேயே சுண்டி இழுத்து விடுவார் டைரக்டர். ஏதோ நடக்கப் ப்பொகிறது, ஆனால் இன்னதென்று தெரியாத எதிர்பார்ப்பு நமக்கு. விய்ர்வை, புழுக்கம், பரவாயில்லை, ‘It is OK’, சற்றே எல்லாருமே ஒழுக்கம் பிறழலாமென்கிற மாதிரி மயக்கம். ஹீரோ அதி புத்திசாலியுமில்லை. தெரிகிறது. இருந்தாலும் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுமளவுக்கு எப்படி அவன் சதாய்க்கப்படுகிறான் என்பது ஸ்கிரிப்டின் வெற்றி.

      இரண்டு மூன்று இடங்களில் காமிரா டாப் ஆங்கிளில் கவிதையே பாடி விடும். எதிர்பாராத சில நிகழ்வுகள் படத்தின் தரத்தை எங்கேயோ தூக்கிக் கொண்டு போய் விடும். அதிலும் ஹீரோயின் வெறும் செக்ஸ் பாம் மாதிரி இருந்து கொண்டு …படத்தைப் பாருங்கள், புரியும்.

      உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சாம்பிளுடன் இதை முடிக்கிறேன். “இது லோக்கல் பார். நாளைக்கு நான் இங்கே புருஷனுடன் வரவேண்டி இருக்கும். அதனால் என்னோடு சேர்ந்து வெளியே வராதே. எனக்கு முன்னாடி போய்க் காரில் வெய்ட் பண்ணு” என்பாள் பதிவிரதை. “அதெல்லாம் எதற்கு …?” என்று சுணங்குவான் ஹீரோ. ‘பளாரெ’ன்று ஒரு அவனுக்கு ஒரு அறை. அம்மா எழுந்து போய் விடுவாள். பாரில் இருக்கின்ற மற்ற பிரஹஸ்பதிகளுக்கும் ஒரே ஷாக். அப்புறம் அவன் வாலைக் குழைத்துக்கொண்டு அவள் பின்னாடியே போய் …அவள் கேரக்டர் (or lack of it) அங்கே நிற்கிறது, ‘எதையும் செய்வாள் எம்டி’ என்று.

      கடைசிச் சில நிமிடங்கள். அவளுடைய சுயரூபம் தெரிந்து, தன்னையே கொல்லுவதற்காகத் தோட்ட வீட்டில் வெடி வைத்திருக்கிறாள், கதவைத் திறந்தாலே ‘டுமீல்’ என்று புரிய வந்த ஹீரோ, அவளிடம் “காதல் தேவதையே, நீயே போய்த் திறவேன் பார்க்கலாம்” என்பான். அம்மாள் சளைக்க மாட்டாளே. கொஞ்சம் கூட்ச் சலனமில்லாமல் அவனுடன் காதல் பிர்கடனத்துடன் அவள் அந்த்த் தோட்ட வீட்டை நோக்கிப் போக, ஹீரோ பதற்றத்தில் -அவள் குற்றமற்ற குலக் குழந்தோ என்கிற குழப்பத்தில்- அவளைத் தடுக்க ஓடுவான்.

      அவள் நிற்காமல் நேரே சென்று….

      கதவைத் திறந்து…

      வெடிகுண்டும் வெடித்து ….

      சஸ்பென்ஸ் படம்ணா …..

      நீங்களே பாருங்கோ.

      அப்புறம் சொல்லுங்கோ.

      ~oOo~

      3. -/இரமணி

      இலக்கியச்சிந்தனையின் சென்றாண்டுக்கான சிறந்த கதை பற்றி எனக்குத் தோன்றியது:

      அதிபர் புஷ்ஷின் பயங்கரவாத வரைவிலக்கணம் போல கறுப்பு-வெள்ளையான பாத்திரப்படைப்புகள். பொதுவுடமை கற்கும் ஆரம்ப எழுத்தாளர் தமிழ்த்திரைப்படத்துக்குக் கதையெழுதியதுபோன்ற குழந்தைத்தனம்.

      ஈசாப்பின் நீதிக்கதைகள் குழந்தைகள் இலக்கியமாகலாம்; ஆனால், தரமான எழுத்தென்பது சுலபமாக நல்லவர்-கெட்டவர் பிரித்துப்போடக்கூடிய பாத்திரங்களின் அதீத சோகச்சாயையினால் மட்டும் உருவாக்கப்பட்டுவிடுமா? [நீதியற்ற எத்தனையோ படைப்புகள், காவியங்கள் ஆகியிருக்கின்றன… கிரிபித்தின் “தேசத்தின் பிறப்பு” ஓர் உதாரணம்] பிரச்சனைகளை இருமை வகைப்படுத்திமிகவும் எளிமைப்படுத்திப் பார்ப்பதும் காலிலே கயிறு கட்டிக் காகத்தை உட்கார்த்திப் பனைமரம் விழுத்துவதும் நல்ல கதைக்கு அடையாளமாகுமா?

      நாடிருக்கும் அவலத்தை, உள்ள கருத்தை அழுத்திச் சொல்வதுமட்டும் ஒரு கதையை நல்ல கதையாக்கி விடமுடியாது – அதுவும் எத்தனையோ தமிழ்ப்படங்கள் இதே தொடக்கத்தையும் முடிவையும் தொட்டபிறகு.

      இந்தக்கதை ஓர் இருபது-இருபத்தியிரண்டு ஆண்டுகள் முன்னால் வாசித்த இன்னோர் ஆனந்தவிகடன் (முத்திரைக்?)கதையை வேறு ஞாபகப்படுத்துகிறது. ஆந்திராவின் இரட்டைநகரிலே வாழும் இந்து-முஸ்லீம் நண்பர்கள் இருவரின் கதையை (எழுதியது, சுப்பிரபாரதிமனியனோ.. சரியாக ஞாபகமில்லை; கதையின் தலைப்பும்கூட..)

      மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும். அறிந்தால், மகிழ்ச்சி.

      ~oOo~

      4. கே.ஆர்.ஐயங்கார் :: பயம்.. பயம்..

      ஹிரோஷிமா, நாகசாகி போன்ற டேங்களில் அணுகுண்டு போட்டதற்கப்புறம் முதன் முதலாக வந்த ஒரே ஜீவன் இது என்று சொல்வார்கள்.

      மிளகாய்ப் பழக் கலர்,அதே சைஸ், குட்டியாய் மீசையுடன் கொஞ்சம் நிறையவே அருவறுப்பைத் தரும் ஜீவன் அது. கரப்பு.

      என்னைச் சிங்கத்துடன் சண்டையிடச் சொல்லுங்கள். ஸ்டண்ட் மாஸ்டர் உதவியில்லாமல் போடத் தயார். (அதுவும் சிங்கம் வண்டலூரிலிருந்து அசோக் நகர் வருவதற்குள் போக்குவரத்து, பொல்யூஷன் என்பவற்றால் நொந்து நூலாகி வீட்டிற்கு வந்ததும் ‘கண்ணா, முதல்ல ரெஸிஸ்டன்ஸ் சக்தி உள்ள ஹார்லிக்ஸ் கொடுப்பா. அப்புறம் உன்னைக் கவனிக்கிறேன்’ என்று சொல்லிப் பெருமூச்சு விட்டு சோபாவில் அமர்ந்து கொள்ளும்).. ஆனால் கரப்பு என்றால் காத தூரம் ஓடுவேன் (காதம் என்றால் எத்தனை கிலோமீட்டர்?).

      சின்ன வயது முதலே கரப்பு என்றால் ஒருவிதமான அலர்ஜியே உண்டு எனக்கு. அதுவும் அரை டிராயரிலிருந்து பேண்டிற்கு மாறிய பருவத்தில் அப்பா என்னிடம், ‘என்னடா.. கரப்புக்கு இருக்கறமாதிரி மீசை அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கு. போய் ஷேவ் பண்ணிட்டு வா..’ சலூன் போனால் ஆஸ்தான ‘பஞ்சமலை’ ‘சின்ன சாமி, இந்த வயசுல ஷேவா. வளரட்டுமே’ எனச் சொல்லியே அரைமனசாய் எடுத்தான்.

      ப்ளஸ்டூவில் ப்ராக்டிகல் கிளாஸிற்காகக் காத்துக் கொண்டிருந்த போது ஜீவாலஜி மாஸ்டர் குட்டிக் கண்களில் சீரியஸ் நிறையக் கலந்து வகுப்புக்கு வரும்போதே ஒரு பையுடன் வந்தார். என்னமோ ஜேம்ஸ்பாண்ட் பாமைச் சரி செய்வது போல, சேரில் அமர்ந்ததும் பயபக்தியுடன் பையில் இருந்து பாட்டிலை எடுக்க அதனுள் நிறையக் கரப்புக்கள் கன்றுக்குட்டி போலத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. ‘வழக்கமாக நான் உங்களை அறுப்பேன். இப்போது நீங்கள் இதை அறுங்கள்’ என ஜோக்கடிப்பதாக நினைத்து அவர் அறுத்த போது மனதிற்குள் பிரளயமே வந்தது. அப்படி இப்படி என சாக்குச் சொல்லி கரப்பை அறுக்காமல் தப்பித்து விட்டேன். (நல்ல வேளை – இறுதிப் பரிட்சையில் கரப்பு வரவில்லை (ஆனாலும் அநியாயம். அந்த பாட்டில் கரப்புகளுக்காக எங்கள் வகுப்பில் இருந்த 40 பேரிடமும் ஆளுக்குப் பத்து ரூபாய் வாங்கிவிட்டார்.100சதவிகித லாபம்..!))

      கரப்புகள் கதவைத் தட்டி வரலாமா என்றெல்லாம் கேட்பதில்லை. அவை இஷ்டம்போல எங்கும் நுழைந்து விடும். அதுவும் முக்கியமாக மனித ஜன்மங்கள் நிம்மதியாக இருக்கும் ஒரே டேமான பாத்ரூமில் நுழைந்து விடும். சுவற்றிலோ , மூலையிலோ நின்றவாறே நம் அழகை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும். அவை அங்கு எதற்காக வருகின்றன என்பதே யாருக்கும் தெரியாது. காதலியைப் பார்க்கவா, அங்கு உள்ள பொந்தில் ஏதாவது ரேஷன் கடை இருக்கிறதா..அல்லது தேமே என சிந்தனை செய் மனமே செய்கிறதா என்பது அவைகளுக்கே வெளிச்சம். அதைப் பார்க்கையிலேயே, ‘கண்ணால் மிரட்டும் கரப்பு’ ‘கவலைக் கரப்பை அடி’ என வெண்பாவிற்கான ஈற்றடிகள்தான் வருகிறதே தவிர, அதை விரட்டும் தைரியம் வருவதில்லை.

      பத்து வருடங்களுக்கு முன்னால் (அப்போது எனக்குக் கல்யாணம் ஆகவில்லை) அலுவலகத்தில் கொஞ்சம் லேட்டாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த போது அறைக்குள் ஏதோ ரொய்ங்க் கென சப்தம் கேட்க நிமிர்ந்தால் பறக்கும் கரப்பு ஒன்று. வீலெனக் கத்தி ஆபீஸ் பியூனைக் கூப்பிடலாமென நான் யோசித்து முடிப்பதற்குள் ‘வீல்’ என்று சப்தம். பிறகு என் கழுத்தில் பூமாலை. பார்த்தால் என் செகரெட்டரி பயந்து போய் என் மீது கைகளைப் போட்டிருந்தாள்! (ராயர் கிளப்பில் ரீல் விடக் கூடாது எனச் சட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன?!)

      சீனர்கள் எப்படித் தான் வேற்றைச் சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை.. அந்தப் பூச்சியே ஒரு உவ்வே.. அதைப் போய் எப்படி உவ்வே எடுக்காமல் சாப்பிடுகிறார்கள்?

      சொல்ல முடியாது. சீனத் திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் ‘கரப்பு தான் எனக்குப் பிடிச்ச மெனுவு’ என்று ஏதாவது பாடல் வந்திருக்கலாம்.

      ஹலோ.. கொஞ்சம் இருங்கள்.

      அந்த மூலையில் ஏதோ கொஞ்சம் மரக்கலரில்.எனக்குப் பயமாய் இருக்கிறது..

      கொஞ்சம் காத்திருங்கள்..

      நான் பார்த்து விட்டு வருகிறேன்.

      ~oOo~

      5. லாஸ் ஏஞ்சல்ஸ் சுவாமிநாதன்

      தன் பெயர் வரவேணும் என்று எழுதிப்போடும் கேனப்பட்டி கந்தசாமிகளால் மட்டும் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அந்தப் பகுதியின் ஆசிரியரே தானே கேட்டு பதில் எழுதிப்போடுவதே அதிகம்.

      சில எடுத்துக் காட்டுகள்.

      1. என் நண்பன் சிம்ரனை விட ஜோதிகா மூத்தவர் என்கிறான்? இது உண்மையா? (கையில சிம்ரன் குளோசப் போட்டோ இருக்கு. அதை எப்படியாவது திணிக்கணும்)

      2. ஏன் நான் 100 முறை கேட்டும் நீங்கள் பதில் போடவில்லை? போனால் போகிறது, உங்கள் 101 கேள்வியை மட்டும் பிரசுரிக்கிறேன். (ஒரு பாரா இடம் இருக்கு எதாவது போட்டுத்தொலைக்கணூமே)

      3. ஏன் கேள்வி-பகுதி சென்ற சில இதழ்களில் வரவில்லை? தன் கேள்வி பத்திரிக்கையில் வராததால் 10 பேர் தீக்குளித்து விட்டதாக செய்தி வந்து, அது சரியா என்று பார்க்க போயிருந்தேன். (அப்படியாவது பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்புதான்)

      4 ஆறாம் வேற்றுமையின் உருபுகள் என்ன? அது, அ என்பன ஆறாம் வேற்றுமையின் உருபுகள். (கையில் இலக்கண புத்தகம் கெடச்சிதுடுத்து)

      5. 1885ல் காலமான பிரான்சு அதிபரின் தாத்தா பற்றி…. ஒரு பக்கம் வர மாதிரி கட்டுரை…. (ஒரு பழைய பைல் இருக்கு இந்தா ஆளைப்பத்தி, எடுத்துவிடணும்)

      6. ஒரு பிரதி அஞ்சு ரூபாய். வாரத்துக்கு பத்து லச்சம் பிரதி விற்கிறது. இவ்வளவு சிரமப்பட்டு எழுதுகிறீர்களே உங்களுக்கு என்ன கொடுப்பார்கள்? பணம் எனக்கு குறியல்ல. நினத்தால் நானே பத்திரிக்கை தொடங்கத் தெரியும். (நேரடியா சம்பள உயர்வு கேட்க முடியல, இப்படியாவது….)

      ~oOo~

      6. மணி மு. மணிவண்ணன் (கலி., அ.கூ.நா.)

      எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் எழுதிய நல்ல சிறுகதை ஒன்றை திண்ணையில் வாசி த்தேன் … மயக்கும் நடைக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவுமே நிறுத்தாமல் படிக்கவைத்த கதை ! – சொக்கன்/லாவண்யா

      ஸ்டீ·பன் லீகாக் போன்ற அருமையான நகைச்சுவை. மனித நேயம் இழையோடும் இது போன்ற கதைகள் மெல்லிய இளந்தென்றலைப் போல் மனதை இதப் படுத்துகின்றன. அதே நேரத்தில் 23 சதத்துக்காகப் பல நூறு வெள்ளிகளை வீணாக்கும் எந்திரம் பற்றிய சிந்தனையும் ஓடுகிறது.

      அன்றாட வாழ்வில் எந்திரங்களோடு ஊடாடுவது பழகிப் போன சிக்கல். அந்த எந்திரத்தைத் தனக்கே உரிய முறையில் நையாண்டி செய்திருக்கிறார். இதே போன்ற நடை ஏதோ ஓர் நினைவுக்கு வராத அறிவியற் புனைகதையிலும் பார்த்திருக்கிறேன் (அசிமாவ்?)

      எந்திரத்தில் உள்ள பிழை வெளிப்படை. ஆனால், பிழையைத் திருத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், திருத்துவதற்கான செலவு பற்றியும் மத்தளராயர் இஷிகவா மீன் எலும்பு வரைபடம் கொண்டு அலசல் செய்து பார்ப்பாரோ? அதே நேரத்தில் எந்த எந்திரமாயிருந்தாலும் இது போன்ற பிழைகள் இல்லாமல் போகாது. எந்திரமில்லாமல், மனிதர்களாயிருந்தாலும், இதைவிட அதிகமான பிழைகள் செய்யக் கூடியவர்கள்தாம்.

      ஆனால், இந்தக் கதை படித்து முடித்து மனதில் அலசியவுடன், கடந்த சில பத்தாண்டுகளில் எந்திரமயமாக்கல் எந்த அளவுக்கு வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என்பதை உணரும்போது ஓர் அதிர்ச்சி. இந்த எந்திரமயமாக்கலில் என் பங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உணரும்போது அதிர்ச்சி மேலிடுகிறது. நடு நிசியில் அழைத்த இளம்பெண்ணின் குரல் ஏதோ ஓர் எச்சரிக்கை மணியை மெல்லியதாக அடிக்கிறாளோ?

      முத்துலிங்கத்தின் நகைச்சுவை மெல்லியது. கதையாடல் நுட்பமானது. மாதாமாதம் வரும் கடிதத்தைப் பற்றிச் சொல்வதாகட்டும், தொலைபேசியில் மனிதக்குரலுக்காகக் காத்திருக்க பித்தோவனின் ஒன்பதாவது சிம்பனி ஒலித்து முடிவதாகட்டும், பனியில் சறுக்கி விழுந்து அந்தக்கால ‘லை’யன்னா போல் தவழ்ந்து தொலைபேசியில் வாய்ஸ்மெயில் அனுப்புவதாகட்டும், தொலைபேசியில் விடும் தகவல்களாட்டும் (முக்கியமாக வெங்கல வாத்தியக் குழுப் பறவைகள்) .. வரிக்கு வரி ஆச்சரியங்கள்.

      அசோகமித்திரனைப் போல் எளிமையான சொற்களில் ஆழமான மனப்பதிவுகளை எழுத்தில் தருவதில் முத்துலிங்கம் பெயர்போனவர்.

      நடுராத்திரியில் தொலைபேசும் பெண்ணோடு நடக்கும் உரையாடல் அழகாக வந்திருக்கும் பகுதி.

      ஒரு முறைக்கு இருமுறை நான் படித்து ரசித்த கதை இது. நல்ல சிறுகதை எப்படி எழுதுவது என்று ஆர்வமுள்ள யாரும் படிக்கவேண்டிய கதை இது. – இரா முருகன்

      ~oOo~

      7. ஹரி கிருஷ்ணன்

      ‘மருவக் காதல் கொண்டேன்’ என்கிறானே பாரதி, ‘மருவுதல்’ என்றால் என்ன? – எல்லே ராம்

      மருவுதல் என்றால் சாதாரணமாக உடலால் இணைதால் என்றுமட்டும்தான் பொருள் சொல்கிறார்கள். அன்பினால் கலந்திருத்தல் என்றால் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் கூட போதும்.

      ஆனால் நம்ப ஆளு இந்த இடத்தில் முதல் பொருளில்தான் சொல்கிறான். ‘வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்’. (சரபேஸ்வரா! ஆழ்ந்த பொருளெல்லாம் உம்ம வேலை.)

      கண்ணன் மேல் கொண்ட விரகத்தில் ராமகிருஷ்ணருக்கு முலைகளே முளைத்தன என்று படித்திருக்கிறேன். மருவும் காதலும் பக்தியிலொரு ரசம்தான்! பரசிவவெள்ளம் கண்ட சாக்தரின் வழியது!

      ஆமாம், ஆழ்ந்த பொருள் என்னவென்று தங்களுக்குத் தெரியாதது போல் தம்பியை டபாய்க்கலாமா?

      டபாய்த்தலின் ஆழ்ந்த பொருளையே அறியாதவன் நான் 😉 – குமார்

      அடுத்த தரவில் (stanza) என்ன சொல்கிறான்? ‘சாத்திரம் பேசுகின்றாய் கண்ணம்மா சாத்திர மேதுக்கடி? ஆத்திரம் கொண்டார்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ?……. காத்திருப்பேனோடீ இதுபார் கன்னத்து முத்தமொன்று’. எனவே, மருவுதல் இந்த இடத்தில் அன்புடன் கூடுதல் என்றுதான் பொருள் பெறும். வவேசு ஐயர் உடல் சம்பந்தமான காதலைப் பாடியிருக்கிறான் என்று முன்னுரையில் சொல்லி, அதற்குச் சமாதானமும் சொல்லி ‘ஆண்டாளைப் போல செயிரின்றி’ பாட எல்லோராலும் முடியாது என்று முடிக்கிறார். ஆண்டாள் பாடாத சரீரக் காதலா! அவளை விடவும் அழகாகப் பாடிவிட முடியுமா!

      அது சரி. உமக்கு ராஜேஸ்வரி நீலமணியைத் தெரியுமா? ‘பாரதி கவித்துவம் ஒரு மதிப்பீடு’ என்று அறுபதுகளின் கடைசியில் ஒரு புஸ்தகம் போட்டார். பாரதி சதா சர்வ காலமும் பெண்ணாசையையும் மருவக் காதல் கொள்வதையுமே பாடியிருக்கிறார் என்று சொல்வார். இங்கேதான் எங்கேயோ கிடக்கிறது அந்தப் புத்தகம். தேடிக் கண்டுபிடித்துப் போடுகிறேன். 😉

      ‘மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்’ என்று வள்ளலார் போலப் பாடாமல், இந்த ஆள் எப்படி இப்படியெல்லாம் பாடினான்?

      ம்?

      ஒழுக்கம் கெட்ட பயல்….

      மார்பு என்னும் பெயரினின்று தழுவுதல் வினை, மருவு என்று பெயர்பெற்றது. இது சினையால் அணையும் பெயர். – இராம.கி.

      ~oOo~

      8. துளசி எனும் சிஃபிராயன் :: ஒயர்கள்: சில குறிப்புகள்

      நீண்ட கவிதைகள் எழுதுவது என் பெருவிருப்பங்களில் ஒன்று. சமீபத்தில் எழுதிக்கொண்டிருக்கும் (ரொம்ப நாள் கழித்து) ஒரு நீண்ட கவிதை இது. இன்னும் முடிக்கவில்லை.படித்துப் பாருங்கள். கருத்து எழுதுங்கள்.

      1. அன்றொரு சின்ன பையன் வந்தான்
      பதினாறே வயது. அதற்குள்
      மூன்றாண்டுகள் அனுபவமாம்
      கணநேரத்தில் வயர்களை இழுத்து
      அதன் முனைகளை லாவகமாய்ச் சீவி,
      பின்னலென வாய்பிளந்துகிடந்த
      ஆணித்துவாரங்களுக்குள் நுழைத்து
      இழுத்து, முடுக்கி, பொருத்தி,
      திரும்பிப் பார்ப்பதற்குள்
      பளிச்சென அறையெங்கும் ஒளிவெள்ளம்.
      பேச்சின் சுவடே அறியாமல்
      கம்பிகளோடு குடித்தனம் நடத்தும் அச்சிறுவனுக்கு
      அன்றைக்கு அந்த ஒயர்கள் தந்தது
      அன்றைய உணவு மட்டும்.

      2. அழுகையும் அலங்கோலமும்
      சிரிப்பும் கூத்தும்
      செய்தியும் பொய்களும்
      சுவையும் நஞ்சும்
      இட்டு நிரப்பியபடி
      நடுக்கூடத்தில் ஓடிக்கொண்டிருந்தது
      ஒயர் ஒன்று.
      மொட்டைமாடியின் கட்டையன்றில்
      கூம்பிட்டு, கிளைகள் பிரித்து
      அடுக்குமாடி அத்தனையும்
      அங்கிங்கு நகராதபடி
      கட்டிப்போட்டு வைத்திருந்தது.
      குழந்தைகள் முதல்
      கிழங்கள் வரை
      கெட்டித் தட்டிப்போன வறட்டு ஜம்பங்களை
      வாரி வழங்கும் இந்த ஒயர்கள்
      நாகரிகம் அறியாதது போலவே
      குறைந்தபட்ச நளினமும் அறியாதவை.

      3. அமானுஷ்யமாய் சுருண்டு கிடந்தது கட்டிடம்,
      இரவின் நிலவொளியில்
      அத்தனையும் முடக்கம்,
      சின்ன குறட்டை
      குழந்தையின் பால் அழுகுரல்
      அப்பாக்களின் உதவாத மிரட்டல்கள்
      விட்டுவிட்டுத் தொடரும் ஆஸ்த்துமா
      இடையே அவசரமாய் அரைபடும் மிக்சி
      சட்டென எழுந்துகொள்ளும்
      ஏதோ ஒரு வீட்டு ஏசி
      அத்தனையிலும் பத்திரம்
      கூண்டுக்குள் அடைந்துவிட்ட நிம்மதி
      காலை வானின் அவசரம்
      சற்றே மறந்து
      அமானுஷ்யமாய் உறங்கிக் கிடந்தது கட்டிடம்
      ஒயர்களின் மடியில்.

      4. மரணத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு வாழ்வது
      மனிதனால் மட்டுமே சாத்தியம்.
      மாடொன்று இறந்து கிடந்தது
      கால்கள் தாறுமாறாய்
      கண்கள் வானில் குத்திட்டு
      அபாயமறியாக் குழந்தைகள்
      ஆவலாய் அதன் முகம் பார்த்து.
      அரசை இரண்டொருவர் விமர்சித்தனர்
      மழையை மற்றொருவர் குற்றம் சாட்டினார்,
      மின்கம்பத்தில் கட்டிவைத்த பால்காரனை
      ஏசினர் சிலர்.
      “சாவோடதான் டெய்லி சம்சாரம்”
      மெல்லிதாய் புன்னகைத்துக்கொண்டே
      மின்கம்பியை விலக்கிவிட்டார்
      கட்டிங் பிளேயரும் டெஸ்டருமாய் அலையும் சம்மந்தம்.
      பால்காரம்மாவுக்குத் துக்கம்
      பார்த்த மாத்திரத்தில் உடைந்துபோனாள்.
      மூணு சக்கர வண்டியில் வாரிப் போட
      விரைத்துக் கிடந்தது
      என் குழந்தை சாப்பிட
      பால் தந்த அன்னை மடி.

      ~oOo~

      9. ஜெயம்மா :: பொய்

      “பிடித்திருக்கிறது” என்கையிலே,
      “பிடித்திருக்கிறது” என்பது உனக்குப்
      பிடிக்கும் என்று தெரிகிறது.

      “கட்டுமா?” என்கிறபோது,
      “கட்டும்” என்பதாகின்றாய்;
      குரல் தாழின்,
      “கட்டாவிட்டாவிட்டால் போகட்டும்” ஆகிறாய்;
      உயரின்,
      “கட்டித்தான் ஆகவேண்டும்” ஆகிறது.

      பரிவேஷம் போர்த்தாமல்
      பொய்யென்றே புரியச் சொல்வதைச்
      சொல்பவர் செய்யும்வரைக்கும்,
      மெல்லிய பொய்யை,
      சொல்பவர் கேட்பவர்
      எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது,

      ‘உனக்கு என்னைப் பிடிக்கிறது;
      எனக்கு உன்னைப் பிடிக்கிறது’
      என்பவை மட்டும் அடக்கமல்ல
      இவற்றுள் என்கிறது நினைப்பு.

      எதேச்சைக்குறிப்பு

      வெயிற்காலத்தின் வெள்ளை வண்ணாத்துப்பூச்சிபோல
      இலைகளின் தாழ்வாரங்களிலே தலைக்கீழாய்
      ஒளிந்து கொள்கிறேன், வௌவாலாய்த் தூங்குறேன்.

      உண்ணாவிரதம் நினைவுக்குவர,
      இரவின் பூச்சிகளை மின்னத் தின்னுகிறேன்.
      தின்னல் தோற்றாலும் விரதம் காக்க
      விழுங்குகிறேன் சாரைகளை.

      தெரிந்தும் தெரியாததுமாய் வீதி தோன்றின பெண்களைத்
      தொடர்கிறேன்; தாண்டித் தீண்டுகிறேன்; தூங்க அழைக்கிறேன்.
      போட்டி நீளும் வரிசையிலே போதுமென வேண்டியவளைத் தேருகிறேன்.

      யுத்தம் மிதக்கும் தேசமொன்றை முக்கிமுக்கித் தேடுகிறேன்;
      பசித்த பூமியன்றைப் பாறாங்கற்பல்லால் முறிக்கக் கொத்தி
      முளைத்த பிட்சாபாத்திரத்தை மொட்டிற் பறித்து விற்கிறேன்,
      அடுத்த பூமியின் இருட்டு லாயக்குதிரைக்கொள்ளுச்சலம் தாங்க.

      துப்பாக்கிக்குள் மையூற்றி துவந்தயுத்தக்காரர் கைக்குட் திணிக்கிறேன்.
      அறியாதாரைப் பொருத அழைக்கிறேன்; இறந்தவரைத் தெரிந்து கொள்கிறேன்.

      தெரிந்த தெருக்களுள்ளே தெரியாதார் வீடுகள் முளைக்கிறன
      செல்கின்ற வீடுகள் வேறொரு வீதிக்கு விந்திக்கொண்டு நடக்கிறன
      அறிந்தவர்கள் முகத்தை கறுப்பு வெள்ளையால்
      கோடு பிரித்துக்கொண்டு பேசாமற் போகிறார்கள்;
      ஊரைக்கடக்கும் புதியவர்கள் கூட நடக்க குரல் கொடுக்கின்றார்கள்

      ஒரு கோடைகாலத்துத்தெருநாயாய்
      நேரம் காணக் கைக்கடிகாரம் நோக்க நேரமின்றி
      புதிரைப் போட்டு என் முன்னாலே போகிற நான்.

      விரும்பியதையும் விரும்பாததையும்
      அலைந்தலைந்து செய்யச்செய்ய
      – கனம் பெருத்து கணமொன்றில்
      விடிந்து உடைந்துபோகிறது
      வெள்ளக்கனவு.

      ~oOo~

      10. லவணராயன் :: ராயர் காப்பி கிளப்

      முன்குறிப்பு : இந்தக் கதையில் வரும் காட்சிகள், சம்பவங்கள், மனுஷ, உலோகப் பாத்திரங்கள், இன்னும் என்னென்ன உள்ளதோ அத்தனையும் கற்பனையே – நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரையும் சுட்டுபவை அல்ல. யதேச்சையாய் அப்படி அமைந்தால், நான் பொறுப்பில்லை, கோர்ட்டுக்கெல்லாம் வரமாட்டேன்.

      காலையில் பசியோடு காப்பிக் கிளப்புக்குள் நுழைந்தபோது முன்னறையில் மத்தளராயர் யாருக்கோ காபி ஆற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தார். சற்றே புகைவாசமடிக்கிற அறைக்குள் கூர்ந்து பார்த்தபோது கறுப்பு மேல்கோட்டு அணிந்து சாம்பார் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு ஒரு கும்பிடு போடலாமோ என்று யோசித்து, ஏதோ பயத்தில் பேசாமல் உள்ளே போய்விட்டேன்.

      உள்ளே ராத்திரி டியூட்டி ராமராயன் தூங்கிவிழும் நிலையில் இருந்தார். என்னைப் பார்த்ததும் வியர்வைத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, ‘என்னப்பா, இன்னிக்கும் லேட்டா !’ என்றார்.

      நான் அசட்டுத்தனமாய் சிரித்து, ‘சாரிங்க, பேச்சிலரை யார் வேளாவேளைக்கு எழுப்பறாங்க சொல்லுங்க’ என்றேன்.

      ‘அலாரம் கடிகாரம் இருக்குமே !’

      ‘இருக்கு, ஆனா அதுக்கு பேட்டரிபோட மறந்துட்டேன், பேச்சிலருக்கு யார் இதெல்லாம் ஞாபகப் படுத்தறாங்க சொல்லுங்க’ என்றேன். அவர் அடுப்புப்பக்கம் திரும்பி புகையிடம் பேசுவதுபோல், ‘எப்போபார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்கு, டெய்லி நான் தூங்க லேட்டாயிடுது’ என்றார். நான் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.

      ‘சரி, ஒரு மசால்தோசை கல்லில போட்டிருக்கேன், ஜன்னலோர டேபிள்ல ஒரு பையன் இருக்கான், அவனுக்குக் கொடுத்துடு’ என்று சொல்லிவிட்டு துண்டை தோளில் பாம்புபோல் சுற்றிக்கொண்டு உள்ளறைக்குப்போனார் ராமராயர்.

      நான் சலிப்போடு முன்னால் எட்டிப்பார்த்தேன், பாரதியார் டி·பனுக்குக் காசு கொடுக்கவும், மத்தளராயர் அதை மறுப்பதுமாய் இருந்தது. ‘உங்ககிட்ட காசு வாங்கலாமாண்ணா, தப்பாச்சே’ என்று சொன்னபோது மத்தளராயர் என்னைப் பார்த்துவிட்டார், ‘பாருங்க, பிள்ளையாண்டான்கூட உங்க கவிதையெல்லாம் பிரியமா படிக்கறவன்தான், உங்ககிட்ட காசு வாங்கினேன்னு தெரிஞ்சா போய்யா நீயுமாச்சு உன் வேலையுமாச்சுன்னு துண்டை உதறிட்டு கிளம்பிப் போயிடுவான்’ என்றதும் பாரதியார் மீசையை முறுக்கினபடி என்னை கோபமில்லாமல் பார்த்தார். ஒரு இடத்தைவிட்டுப் போகிற எல்லோரும் ஏன் துண்டை உதறிப்போகிறார்கள் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். பாரதிக்குத் தெரிந்திருக்குமா ?

      ‘இவனும் கவிதையெல்லாம் எழுதுவான்’ என்றார் மத்தளராயர். பாரதியாரிடம் இதைச் சொல்வது சத்தியமாய் வஞ்சப் புகழ்ச்சிதான்.

      பாரதியார் எங்கள் இருவரையும் தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டு, ‘இப்போ., யார்தான் எழுதலை ?’ என்றார். ‘அதைச் சொல்லுங்க, கவிதையெல்லாம் எழுதறானே தவிர, வேலையண்ணும் சுத்தமில்லை, போனவாரம் இப்படித்தான் பாருங்க, ஒரு கஸ்டமர் காபி கேட்டிருக்கார், கொண்டுபோய் கொடுக்கவேண்டியதுதானே, அதைவிட்டுட்டு, ‘காபி எதற்காக ?’ன்னு பாரதிதாசன் பாட்டாமே, அதைப் பாடிக்காட்டி அவரை விரட்டியடிச்சிருக்கான்’ என்றார் மத்தளராயர்.

      நான் கோபத்தோடு முன்னால் வந்து, ‘நீங்க பாதி உண்மைதான் சொல்றீங்க’ என்றேன், முதலாளியின் முன்னால் அப்படிப் பேசுவதற்கு சங்கடமாய் இருந்தாலும், நேர்மைத்திறம் சொல்லித்தந்த பாரதி எதிரில் இருக்கும்போது எதுவும் பேசலாம், ‘என்ன அப்படி பாதி உண்மை ?’ என்றார் மத்தளராயர்., ‘காபி எதற்காக-ன்னு நான் பாடினதும், நம்ம கோடிவீட்டு நீலகேசிப் பாகவதர், ‘அமுதும், தேனும் எதற்கு ? காபி அருகில் இருக்கையிலே எனக்கு’ன்னு காபி ராகத்தில ஒரு பாட்டுப்பாடினார், காபி குடிச்சுண்டு நம்ம தெருவே அதை ரசிச்சது மறந்துபோச்சா ?’ என்றேன், ‘அன்னைக்கு மொத்தம் நூறு காபி ஓடியிருக்கும்’ என்றதில் பாரதியார் ஆர்வம் காட்டவில்லை, ‘என் காசை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்பதுபோல் பத்து ரூபாய் நோட்டை நீட்டியபடி இருந்தார்.

      மத்தளராயர் அதை வாங்கி அவருடைய கோட்டுப்பையில் திணித்தார், ‘அப்பப்போ காபி, டிபன் சாப்பிட நம்ம க்ளப்புக்கு வரப்போக இருங்கோ, அதுவே போதும் !’ என்றார். பாரதியார் அப்போதும் திருப்தியானதாய் தெரியவில்லை. நான் பேசாமல் சமையலுள்ளுக்கு வந்தேன். அடுப்பில் தோசை தீய்ந்துகொண்டிருந்தது. அவசரமாய் தோசைத்திருப்பியைக் கொத்தி எடுத்து அதைத் திருப்பப்போனபோது அது அலறியது, ‘திருப்பாதே, திருப்பாதே !’

      நான் அதை விநோதமாய்ப் பார்த்து, ‘ரொம்ப தீய்ஞ்சு போயிட்டேப்பா, திருப்பித்தான் ஆகணும்’ என்றேன்.

      ‘இல்லை இல்லை, ஜன்னலோரமா உட்கார்ந்திருக்கிற பையனுக்கு தீய்ஞ்ச மசால்தோசைதான் வேணுமாம், இன்னும் தீயணும் நான்’ என்று வாடையோடு சொன்னது மசால்தோசை. நான் உள்ளே எட்டிப்பார்த்து, ‘அதானே, தீய்ஞ்ச தோசை போடறதில நம்ம ராமராயர் எக்ஸ்பர்ட்டாச்சே’ என்றேன்.

      உள்ளறையில் உடுப்பு மாற்றிக்கொண்டு தூங்கப் போயிருந்த ராமராயர் தலையைத் தூக்கிப்பார்த்து, ‘இன்னொரு தடவை என்னைக் கிண்டல் பண்ணினே, நடக்கிறதே வேற’ என்றார் அதற்குமேல் வேறொன்றும் யோசிக்கமுடியாமல்.

      நான் தோசைக்கரண்டியை ஓரமாய் வைத்துவிட்டு மாடியேறுகிற படிகளில் உட்கார்ந்துகொண்டேன், ‘ராமராயரே, இந்தச் சின்னப்பையன்மேல அப்படி என்ன கோபம் உமக்கு ?’

      அவர் அசைவில்லாமல் பேசினார், ‘தினம்தினம் லேட்டா வந்தா எப்படி ? பகல்ல நீங்க ரெண்டுபேர் பண்ற வேலையை ராத்திரியில நான் ஒருத்தன் பண்றேன்’ என்றார். நான் குறும்பாய் சிரித்து, ‘அப்படியே இன்னொரு தடவ திருப்பிச் சொல்லுங்க ராயர், வேற அர்த்தம் தோணுது எனக்கு’ என்றேன். ‘படவா, வயசுக்கேத்த பேச்சா பேசுடா’ என்றார் அவர்.

      ‘அதில்ல ராயர், ராத்திரியில கூட்டம் குறைவாதானே இருக்கும், அதைச் சொன்னேன்’ என்று சமாதானப்படுத்த முயன்றேன்.

      ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை, வெளிநாட்டுத் தமிழர்களெல்லாம் ராத்திரியிலதான் சாப்பிட வர்றாங்க, அவங்களுக்கு இன்னும் நம்ம ஊர் சாப்பாட்டு நேரம் பழகலையாம், இப்படித்தான் ஒருத்தன் ராத்திரி ஒன்றரை மணிக்கு வந்து உட்கார்ந்து, ‘இந்தியன் நூடூல்ஸ்’ வேணும்ங்கறான்’

      ‘இந்தியன் நூடூல்ஸா ? அப்படீன்னா ?’

      ‘அதான் எனக்கும் புரியலை, அப்புறம் விசாரிச்சுப் பார்த்தா, சேமியா உப்புமா ! கிண்டிக்கொடுத்தேன், நாக்கை சப்புக்கொட்டிண்டு சாப்பிட்டுட்டு அஞ்சு டாலர் டிப்ஸ் வெச்சுட்டுப் போனான்’ என்று கையிலிருந்த டாலர் நோட்டை உயர்த்திக் காட்டிவிட்டு டக்கென்று மறைத்துக்கொண்டார் ராயர்.

      முன்னறையில் இன்னும் விவாதம் நடந்துகொண்டிருந்தது, பத்து ரூபாய் விஷயமா, அல்லது இலக்கியம் பற்றிப் பேசுகிறார்களோ தெரியவில்லை, நான் ராமராயரிடம் திரும்பி, ‘பாரதியாரை எங்கே பிடிச்சார் முதலாளி ?’ என்றேன்.

      அவர் பெரிதாய் சிரித்தார், ‘காலையில இங்க சாப்பிட வந்த ஒரு பாடகி, சமையல் ரொம்ப பிடிச்சிருக்குன்னு இங்கயே உட்கார்ந்து ரெண்டு பாட்டு பாடிட்டுப் போச்சு, காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாட ஆரம்பிக்கும்போது பாரதியார் உள்ளே வந்துட்டார், ஆசையா உட்கார்ந்து கேட்டார், அப்புறம் முதலாளி அவரைப் பிடிச்சுண்டு, சாப்பிட்டுட்டுப் போனாதான் ஆச்சுன்னு ஒரே பிடிவாதம்’ நான் ஆமோதிப்பாய்த் தலையாட்டினேன், ‘பெரிய ஆட்கள்லாம் நம்ம க்ளப்புக்கு வந்துபோறது பெருமைதான் !’

      திடீரென்று ஞாபகம் வந்ததுபோல், ‘நேத்து யாரோ புதுக்கவிஞர் வைத்தீஸ்வர்ராமே, அவரைக் கூட்டிண்டு வந்து உட்காரவெச்சு ரெண்டு மணிநேரம் நவீன கவிதை, நவீன இலக்கியம்ன்னு பேசிண்டிருந்தார் முதலாளி’ என்றார் ராமராயர். நான் சிரிப்போடு, ‘பேசறதெல்லாம் நவீனம்தான், ஆனா சமையல் மட்டும் அதே இட்லி, வடை, போண்டா, தோசை’ என்றேன், ‘கர்நாடகமா இருக்கு !’

      ‘இருந்தா என்னவாம் ?’ மூலையிலிருந்த இட்லிப்பானை தலையைத் தூக்கிப்பார்த்துக் கேட்டது, ‘இந்த சாப்பாட்டிலதான் சத்து அதிகம், தெரியுமா ?’ என்றது அது. ‘இட்லி தவிர வேறெதையும் பார்த்ததில்லை நீ, அதான் இப்படிச் சொல்றே !’ என்றேன் நான். ‘பிஸ்ஸா, பர்கர், சாண்ட்விச்-சுன்னு என்னென்னவோ பேசிக்கறாங்க, தெரு முனையில சேப்புக்கலர் பளபளா கட்டிடம் ஒண்ணு வந்திருக்கு, எந்நேரமும் அங்கே பெண்கள் கூட்டம்தான்’ என்று இட்லிப்பானைக்கும், ராயருக்கும் பொதுவாய் சொன்னேன்.

      ‘அதைச்சொல்லு, உனக்கு கல்யாண ஆசை வந்துடுத்துடா அம்பி, அதான் பர்கர் அது இதுன்னு சொல்லிட்டு பாப்பாக்களைப் பார்த்துட்டு வர்றே’ என்றார் ராமராயர். நான் கோபமாய், ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றேன்.

      ‘இதைச் சொல்லும்போது கோபம் வந்தா, அதெல்லாம் ஒண்ணும் இருக்கு- ன்னுதான் அர்த்தம்’ என்றார் அவர். நான் சிரிப்போடு, ‘இல்லை ராயரே, கல்யாணமெல்லாம் எதுக்கு ? அநாவசியமா நம்ம சுதந்திரத்தை யார்கிட்டயோ அடகுவைக்கணும்’ என்றேன். ‘அதில்லடா’ என்று அவர் ஏதோ பேசவந்தார், ‘நமக்குன்னு ஒரு ஜீவன், எத்தனை நாளைக்கு தனியா இருப்பே- அது இதுன்னு டயலாக் விடாதீங்க ராயரே, நிறைய கேட்டாச்சு’ என்று சிரித்தேன், ‘கல்யாணத்தை சரின்னு ஒத்துக்கவும் முடியலை, வேண்டாம்ன்னு முழுமனசா ஒதுக்கவும் முடியலை !’ என்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்தார்.

      ‘நம்ம மணிப்பய இருக்கானே, அதாண்ணா, போன மாசம் கல்யாணமாச்சே, அவன்தான், ரெண்டுநாள் முன்னால அவன் இங்கே காபி சாப்பிடறச்சே மனீஷா கொய்ராலாவோ, மனுஷக் கொரில்லாவோ, அவளைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு ஏதோ புகழ்ந்து தள்ளியிருக்கான், நம்மாட்கள் சும்மா இருப்பாங்களா, நேரா அவன் புதுப்பொண்டாட்டிகிட்டேபோய் வத்தி வெச்சுட்டான்கள், அவன் வீட்டுக்குப்போனதும் கன்னாபின்னான்னு சண்டையாம், ரெண்டுநாளா பேச்சுவார்த்தையே இல்லையாம், நேத்து சொல்லி வருத்தப்படறான், இதெல்லாம் தேவையா ?’ என்றேன் நான்.

      ராயர் பேசாமல் இருந்தார், தூங்கிப்போய்விட்டார் என்று நினைத்து நான் எழுந்துகொண்டபோது, ‘தப்பு கல்யாணத்துமேல இல்லைடா, அவன் பொண்டாட்டிமேல, சண்டை போடறதில தப்பில்லை, ஆனா இன்னிக்கு வந்த சண்டையை இன்னிக்கே முடிச்சுக்கணும் – அதை நாளைக்குத் தொடரவிட்டோம்ன்னா ஆபத்து’ என்றார், ‘திருவள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமோ ?’, அவர் தொடர்ந்துசொல்வதற்குள் நான் எழுந்து, ‘அவர் என்ன சொல்றதா இருந்தாலும், நாளைக்கு நம்ம க்ளப்பில காபி சாப்பிட வரும்போது கேட்டுத் தெரிஞ்சுக்கறேன், இப்போ பசிக்கறது’ என்றேன்.

      மசால்தோசை நன்றாக தீய்ந்திருந்தது, கரிக்கட்டைபோல் இருந்ததை தட்டில் கொட்டி ஜன்னலோர டேபிளில் கொண்டுபோய் வைத்தபோது அங்கிருந்தவன் தோசையை முகர்ந்துபார்த்து, ‘நைஸ்’ என்றான். நான் முணுமுணுத்தபடி சமையலுள் வந்தபோது மத்தளராயர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டிருந்தார், ‘லவணராயா, ஒரு பெரிய கல்யாண ஆர்டர் பிடிச்சிருக்கேன்’ என்றார் முகம் முழுக்க சிரிப்புடன். நான் ஆர்வமில்லாமல், ‘சாப்பிட்டாச்சா ?’ என்றேன்.

      ‘ஆச்சு, நீ சாப்பிட்டியோ ?’

      ‘இல்லை’

      ‘முதல்ல சாப்பிடு, இதைப்பத்தி நாம அப்புறம் பேசுவோம்’ என்று சொல்லிவிட்டு அவர் யாரோ கஸ்டமரை கவனிக்கப் போனார். ‘காபியில ஈ விழுந்து கெடக்கு ?’ என்று அவர் புகார் செய்வதும், மத்தளராயர் அதற்கு நீளமாய் ஏதோ பதில்சொல்வதும் காதில் விழுந்தது. அடுத்த காபி கொண்டுவரும்வரை சுவற்றிலிருந்த அலமாரிப் புத்தகங்களில் எதைவேண்டுமானாலும் அவர் எடுத்து படித்துக்கொள்ளலாம் என்று மத்தளராயர் அனுமதி தந்தார். சிவப்புத்துண்டு கஸ்டமர் நிதானமாய் எழுந்து ஒரு சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டார்.

      நான் இன்னொரு காபி போட்டு கொண்டுபோய் அவருக்குத் தரும்போது அவர் என்னை முகச்சுளிப்போடு பார்த்து, ‘நீ எழுதின புஸ்தகமா இது ?’ என்றார். நான் அவசரமாய், ‘இல்லவே இல்லை’ என்றேன். ‘கதை சொல்றவனுக்கு, தான் எழுதற விஷயத்தைப் பற்றி முழுஞானம் இருக்கணும்’ என்றார் அவர். எனக்குப் புரியவில்லை. விளக்கமாய் சொல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டேன். ‘மாட்டுக்கு எத்தனை சுழி இருக்குன்னு உனக்குத் தெரியுமாய்யா ?’ என்றார் அவர். ‘தெரியாது’ ‘நல்லது, அதனாலதான் நீ மாட்டைப்பத்தி கதை எழுதலை, இங்கே பார் ஒருத்தர் மாட்டைப்பத்தி எழுதறேன்னு ரெண்டே ரெண்டு சுழியைமட்டும் எழுதியிருக்கார், மத்ததெல்லாம் என்ன ஆகறதாம் ?’ என்றார்.

      நான் பதிலேதும் சொல்லாமல் உள்ளே வந்தபோது மத்தளராயர் வெற்றிலை சீவலை வாயில் குதப்பினபடி, ‘தோசையைச் சாப்பிடச்சொன்னா ஓட்டையை எண்ணுறாங்க’ என்றார் பொதுவாய். ஓட்டையில்லாமல் தோசை பண்ணுவது சாத்தியமா என்று யோசித்தபடி நான் இரண்டு இட்லிகளை எடுத்துக்கொண்டு படியில் உட்கார்ந்து அரக்கப்பரக்க சாப்பிட ஆரம்பித்தேன்.