Snapjudge

Posts Tagged ‘JM’

ஜெமோபாரதம் – 10, 11

In Mahabharat on ஜனவரி 12, 2014 at 11:59 பிப

முந்தைய பகுதி

1. ” அப்போதும் இறைவன் தோன்றாமலிருக்கவே தன்னைத் தானே தேடி, தன்னுள் எஞ்சிய இமையாது தன்னை நோக்கும் தந்தையின் ஈராயிரம் விழிமணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வீசினாள்.

2. பத்தாம் தவணையை படிக்கும்போது ஏபி நாகராஜனின் “திருவிளையாடல்” நினைவுக்கு வரும்.

3. “வாரணாசியின் படிக்கட்டுகளில் இறங்கிச்சென்று அசைவிலாததுபோல் அகன்றுகிடந்த கங்கையின் விளிம்பில் மெல்ல கரையை துழாவிக்கொண்டிருந்த நீரின் குளிர்நாக்கில் அந்த தீபங்களை வைத்தனர்.

4. சித்ரகர்ணி காணாமல் போய்க் கொண்டிருக்கிறதாம்: A looming lion extinction. They now occupy less than one percent of their historic range in West Africa.

5. “சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”

“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி.

6. “ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.”

7. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.

8. “இத்தனை வருடங்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.

9. பாய்கலை:

பாய்ந்து ஓடும் மானின் ஆற்றலோடு அவள் இணைக்கப்பட்டும் மான் கொற்றவையின் ஊர்தியாகவும் விளங்குவது இதில் புலனாகிறது.

வெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

     “ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை
கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்”

என்னும் பாடல் கருத்து இதனை உணர்த்துகிறது.

{1:63}__3+

  • திருஞானசம்பந்த சுவாமிகள் – தலம்: திருப் பிரமபுரம் (அல்லது காழி)

ஐயமேற்கச்சென்ற அழகர்

இப்பதிகம் முழுதும் தலைமகள் தலைமகனைத் தன் எதிர்ப்படுத்திப் பேசுதல்போல் அமைந்துள்ளது.

பெருமான் பெண்கள் தரும் பிச்சையேற்கத் தாருகாவனத்துட் செல்கிறார்ஐயமேற்கும் பொழுது அப்பெண்டிர்களின் ஆடைஅணிவளையல்வாகுவலயம்உள்ளம்பெண்மைஇவைகளைக் கவர்கிறார்அப்பெண்கள் பெருமானை நோக்கி இரங்கிக் கூறும் உரைகள் இவை.

நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டு அயலே
பகலாப்பலி தேர்ந்து ஐயம் வவ்வாய்
பாய்கலை வவ்வுதியே
அகலாது உறையும் மாநிலத்தில்
அயல் இன்மையால்
அமரர் புகலால் மலிந்த பூம்புகலிமேவிய புண்ணியனே

Having placed on one side of the cool matted hair a laughing skull and white crescent

begging alms in the day-time
you do not snatch away the alms.
but snatch away the flowing garment.
in the wide world from which everything dwells without leaving it.
as there is no other place of refuge.
the holy being who is in Pukali where there are many immortals who sought refuge there.

10. மிகப் பெரிய ஊரை, மாபெரும் போரை, பிரும்மாண்டத்தை திரைப்படமாகக் கொணர்வது எளிது. அதுவே, எழுத்தில் கொணர்வது எப்படி என்பதை செயமோகன் மீண்டும் மீண்டும் அருமையாக சொல்கிறார். கூடவே தெரிந்த விஷயங்களை எவ்வளவு சுவாரசியமாக ஆக்குவது என்பதையும் நிரூபிக்கிறார். அதனுடன், பின்னணி நாடகங்களை திரைமறைவில் நடந்திருக்கக் கூடியதை உணர்த்துவது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சுட்டி: 10 | 11

ஜெமோபாரதம் – 9

In Mahabharat on ஜனவரி 9, 2014 at 2:49 முப

முந்தைய பகுதி

இன்று விமர்சன காண்டம்.

இந்தியர்களுக்கு விதியின் மீது பழி போடுதல் மிகவும் பிடித்தமான காரியம்.

விபத்து நடந்ததா… வினைப் பயன்.
புற்றுநோய் வந்ததா… போன ஜென்மத்து பாவம்.
குழந்தை பிறக்கவில்லையா… முற்பிறவி மீது பாரத்தைப் போடலாம்.

காரணமில்லாததற்கு காரணம் கற்பிக்க… தலைவிதி உதவுகிறது. மேலும் மேலும் ஆராய்ந்து மண்டை காயாமல், பிரச்சினைக்கு மூடுவிழா போட பூர்வஜென்மத்து தோஷம் பழியேற்கிறது.

நல்ல படிப்பறிவும், படித்ததை கிரகிக்கும் திறனும் கொண்ட பீஷ்மர் செய்த குளறுபடிகளின் தொகுப்பே மகாபாரதம். அடிமைகளாக மூன்று பெண்களைப் பிடித்து வந்தார். அவர் கற்ற நீதிநெறிகளை பின்பற்றாமல், குற்றம் புரிய சொன்னவர்களிடம் இடித்துரைக்காமல், அறமற்ற சேவகனாக தன்னை வெளிக் காட்டிக் கொண்டார்.

கருப்பர்களை நீக்ரோக்கள் என விளித்து அடக்கியாண்டதை எண்ணி அமெரிக்கா நாள்தோறும் விசனப்பட்டு, மாற்றுப் பாதையில் நடப்பதை பார்க்கிறோம். காரோட்டும் உரிமை கூட இல்லாத இஸ்லாமிய நாட்டுப் பெண்களுக்காக ஃபேஸ்புக்கில் குரல் எழுப்புகிறோம். இன்னமும் இந்த மகாபாரத அட்டுழியங்களை நாட்டுப் பிரஜைகளோ, அரசியின் சிப்பந்திகளோ உரையாடாத, அரசல் புரசலாகவாவது அங்கலாய்க்காத காலத்தில் இருக்க வேண்டாம்.

பீஷ்மர் ஒரு நாள் கூட ராஜ்ஜிய சுகத்தை அனுபவிக்காமல் இல்லை. பிரம்மச்சாரி என்னும் பட்டத்தை வைத்துக் கொண்டார். சத்தியவதியை நினைத்து கைமைதுனம் செய்திருப்பார் என்பதில் கற்பனையை விட நிஜத்தின் விகிதாச்சாரம் நிறையவே இருக்கும்.

இராமரை அவருடைய குடிமக்கள் விமர்சித்தது போல் வால்மீகியும் கம்பரும் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அங்கே சீதை பெண். ஆனால், பீஷ்மர் கொத்தடிமைகளை அபகரித்து, தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வாழ்ந்ததை, பீஷ்ம அரசின் கீழ் வாழ்ந்த எந்த குடிமகனும் வம்பு பேசியதாக மகாபாரத எழுத்தாளர்கள் சொல்வதில்லை. எழுதுவது எல்லாமே ஆண்கள்.

அம்பையும் இன்ன பிற மருமகள்களின் வாழ்வு நாசமாகியதற்கு முழுமுதற் காரணம் மாமியார்களே என சன் டிவியும் சோப்ராக்களும் வியாசரும் ஓதுவார்கள்.

பீஷ்மர் மற்றவர்களிடம் இருந்து நல்ல பேரைப் பெற வேண்டும் என்பதற்காக நாய் போல் நன்றியுடன் இயங்கி இருக்கிறார். ”அப்பாவால் மெச்சப் பட வேண்டும்; இவனைப் போல் பிள்ளை கிடைப்பானா” என ஊரார் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதற்காக பீஷ்ம சபதம். அந்த சபதத்திற்குப் பின் அதிகாரபூர்வமாக மணம் புரியவில்லை. இக்காலமாக இருந்தால் தற்பால் விரும்பி என அம்பை சரியாக ஊகித்திருப்பாள்.

அப்பா போன பின் சித்தியிடமிருந்து பெரிய பாராட்டும் நற்சான்றிதழும் கிடைப்பதற்காக சத்யவதி ஏவிய காரியங்களை நிறைவேற்றுதல். அதன் பிறகு திருதராஷ்டிரனுக்கு… அதன் பிறகு துரியோதனனுக்கு. அரசு ஊழியராக ஓய்வு பெறும் திருப்தி அவருக்கு வேண்டியிருந்திருக்கிறது. முகஸ்துதிக்கும் அங்கீகாரத்திற்கும் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்திருக்கிறார்.

வெறும் கறுப்பு – வெள்ளையாக அமையாமல், நேர்க்கோடில் பலாபலன்களைச் சொல்லிச் செல்லாததால், மேற்கூறிய எண்ணங்களை உருவாக்க வைத்ததால், இன்றைய பகுதி முக்கியமான பகுதி.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 9 :: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஜெமோபாரதம் – 8

In Mahabharat on ஜனவரி 8, 2014 at 5:30 முப

முந்தைய பகுதி

1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது

இதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுரி அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.

2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…

இன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா?

3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்

இது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா! என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.

4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்

இப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.

5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.

இது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…

ஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்

7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது

இது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.

8. “அக்கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.

படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”

ஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.

9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.

கதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8

ஜெமோபாரதம் – 7

In Mahabharat on ஜனவரி 7, 2014 at 3:23 முப

முந்தைய பகுதி

1. “சிப்பிக்குள் வாழ்ந்த பரீட்சித் தனக்கென அறையை உருவாக்கிக் கொண்டதும் சரி, கண் தெரியாத குட்டிநாயாக தன்னை ஜனமேஜயன் உணர்வதும் சரி அவ்வாறு வாசிக்கப்படவேண்டியவை.”

வியாசனை நோக்கி கடலில் வரும் மீன்களை சொற்களாக எடுத்துக்கொண்டால் அவருக்கு ஸித்தி காட்சிகொடுப்பது வரை ஒரு கவிதையைக் காணமுடியும்.
வெண்முரசு – வாசிப்பின் வாசலில்…

2. எழுத்தாளரே தன் எழுத்திற்கு விளக்கம் கொடுப்பது எனக்கு உதவுகிறது. அதனால்தான், எழுத்தாளரின் பேட்டியை வாசிக்கிறேன். நேர்காணல் எடுக்க விரும்புகிறேன். ஆக்கினவரின் வாயினாலேயே ஆக்கத்தின் அர்த்தத்தையும் நுண்ணிய தருணங்களையும் இது போன்ற பொறிப்புரைகளையும் ரசிக்கிறேன். ஆங்கிலத் திரைப்படம் பார்த்து முடித்த பிறகு, அந்தப் படத்தை இயக்கியவரின் வர்ணனையோடு படத்தை மீண்டும் பார்ப்பது போல், படைப்பாளியின் குரலில் படைப்பை மீண்டும் படிக்க இவை உதவுகிறது.

இந்த வார நியு யார்க்கரிலும் ”ஆமென்” என்கிறார் ஹானா ரோஸ்ஃபீல்ட்: No More Questions: A Brief History of Author Interviews : The New Yorker

3. “அரியணைகள் ஆயுதங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன என்பது அரசுகள் தோன்றிய காலம் முதல் நம்பப்பட்டுவரும் பொய். அரசுகள் மக்களின் விராடவடிவங்கள் மட்டுமே. அவை மக்களை ஆள்வதில்லை, மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன

“People will always elect the government they deserve” (பிரஜைக்களுக்குத் தக்க ராஜாதான் கிடைக்கிறார்) என்பது லிங்கன் முதல் ஜோசப் வரை சொல்வதாக ஜார்ஜ் புஷ்ஷின், இராக் பழிவாங்கல் போரினால் அமெரிக்காவிற்கு பட்டம் சூட்டப்பட்டது. சில பெருநிதி நிறுவனங்கள், இன்னும் மிகச் சில அதிசெல்வந்தர்கள், இன்னும் மிக மிகச் சில உலக சூத்திரதாரிகளால் அவை ஏவப்படுகின்றன என்பதை ஆய்வு புத்தகங்களும் உள்நோக்கர்களும் அமெரிக்காவிலேயே விமர்சனபூர்வமாக தெரிவித்தாலும், அமெரிக்கா என்றால் சண்டைக்கோழி என்னும் பிம்பம் மாறவாப் போகிறது?

4. இரப்பர் காலத்தில் இருந்தே இளமையையும் அழகையும் அந்த வயதில் ஏற்படும் காதலையும் இரம்மியமாக சித்தரிப்பவர் ஜெயமோகன். எப்பின் – த்ரேஸ் ஈடுபாட்டை படித்த பின்னர் இன்னொரு திருப்தியான நேசப் பரிமாற்றமாக இன்றைய அத்ரிகை – சத்தியவான் பகுதி அமைந்திருக்கிறது.

5. “ நிலவொளியில் யமுனை கிளர்ச்சிகொண்டிருந்ததனால் அலைகள் அவர் தோள்களுடன் மல்லிட்டன.

“இளங்காடுகள் நீரலைகளில் நடனமிட்டன.”

“ ஒருவாழ்நாளைக் கழித்தவராக யுகயுகமாகச் சென்று ஒருகணம் கொப்பளித்து உடைவதுபோல நீருக்குமேலே வந்தார்.

6. மச்சகன்னி, கடற்கன்னி என்றெல்லாம் கொச்சை வார்த்தைகளைத் தவிர்த்து நீர்மகளிர் என்னும் சொல்லாக்கமே கண்ணியம் கலந்த ஆர்வத்தைத் தூண்டும் பிரயோகம். அதே மாதிரி இம்மி பிசகினாலும் விரசம் ஆகிவிடக் கூடிய பத்மினி, சித்ரிணி, சங்கினி, ஹஸ்தினி இன்ன பிற விவரிப்பும், வெறும் தகவலாக அமையாமல் காட்சியோடும் கதையோடும் ஊடாடி சொருகப்பட்டிருக்கும் லாவகத்திற்காகவே இந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.

7. சமீபத்தில் ஜப்பானிய பொருட்காட்சி சென்றிருந்தபோது அங்கே, “ஆ… ஊ…” என்று சத்தம். தலையில் கொண்டை; கூடவே ஆம் அத்மி மாதிரி தொப்பியோ அல்லது ஆங்காங்கே சொருகிய ரிப்பனோ எட்டிப் பார்த்தது. அவளுக்கு மேலே பிள்ளையார் சதுர்த்தி போல் குடை ஒன்று நின்றிருந்தது. எதிரே பெரிய டமாரம். அதில் அடித்து அதகளம் செய்து கொண்டிருந்தாள். இன்னொரு புறம் நிறைய சிப்பிகள். எல்லாமே அழுக்காக, பார்ப்பதற்கு பழுப்பும் கருப்பும் கலந்து அருவருக்கவைத்தன. அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுத்தால், அதில் இருந்து முத்தை எடுத்து நகையாக்கித் தருகிறாள். அலங்காரம், செய்தொழில் ஒவ்வொன்றிலும் கேளிக்கை கலந்த ஆர்பாட்ட வழிமுறை, இவற்றை வேடிக்கையாக அலுக்காமல் மீண்டும் மீண்டும் அரங்கேற்றுவது என்பதால், மச்சகந்தி ஜப்பானில் இருந்து வந்திருப்பாளோ?

8. இருநூற்றியிருபது முத்துக்களை ஒவ்வொரு முழுநிலவுநாளாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 220 மாதங்கள். அப்படியானால், பதினெட்டே கால் வருடங்கள் சேர்ந்திருந்திருக்கார்கள் என்றவுடன் பழைய ஜோக் தோன்றியது.

கல்யாணம் ஆன முதல் வருடம் மனைவியுடன் சேரும்போதெல்லாம், ஒரு ஜாடியில் ஒரு டாலர் போடுங்கள். முதல் வருடம் முடிந்த பிறகு, உங்கள் மனைவியுடன் எப்பொழுதெல்லாம் சேருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம், அந்த ஜாடியில் இருந்து ஒரு டாலரை எடுங்கள். நீங்கள் சாகும் வரை, அந்த ஜாடியில் நிறைய டாலர்கள் நிச்சயமாக பாக்கி இருக்கும்.

9. திடீர்னு “கடல்” பாடல் நினைவிற்கு வந்தது:

சித்திரை நிலா ஒரே நிலா
பரந்த வானம் படைச்ச கடவுளு
எல்லாமே ஒத்தையிலே நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 7: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஜெமோபாரதம் – 5 & 6

In Mahabharat on ஜனவரி 6, 2014 at 3:17 முப

முந்தைய பகுதி

1. ஜெயமோகன் வேகத்திற்கு கணிப்பொறி எப்படி ஈடுகொடுக்கிறது எனத் தெரியவில்லை; என்னால் முடியாது. ஜெயபாரதத்தில் பீஷ்மரையே ஏதோ ரஜினி படத்தில் கிரேசி மோகன் திரையில் தோன்றுவது போன்ற அடிப்பொடி அறிமுகம் செய்விப்பதால், நானும் எப்பொழுதெல்லாம் மேற்கோள்கள் பொங்கி நிறைகிறதோ அப்பொழுது மட்டும் தொகுத்தால் போதும்.

2. வியாசவனம், தனக்கென ஒரு பிரபஞ்சம் என்றெல்லாம் வாசித்தவுடன் திரிசங்குவும் அவருக்காக விசுவாமித்திரர் சிருஷ்டித்த சொர்க்கமும் பாரதத்தில் இராமாயணத்தை நினைவுக்குக் கொணர்ந்தன.

3. “எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்ட அவர்கள் நடுவே கற்பனையால் காலத்தை வென்றவர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர்.

4. வியாசருக்கான அறிமுகம்… அக்ஷர்தாமில் பார்த்த சுவாமிநாராயண் மாதிரி பிரும்மாண்டமாக, வைரமுத்து எழுதிய தல/தளபதிக்கான அறிமுகப் பாடல் போல் கம்பீரமாக, விநாயகருக்கே கை நடுங்க வைக்கும் சண்டமாருதம் போல் அமர்க்களம்.

5. “ எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் சத்வ, ரஜோ, தமோ முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன.

6. பங்குனி என்று எளிமையாக எழுதாமல் எதற்கு நீட்டி முழக்கி “ஃபால்குன” போட வேண்டும். தேவையில்லாமல் பல்லுடைக்கிறார் யுவர் ஆனர்.

7. ஜெயமோகனைப் படித்து கொஞ்சம் மூச்சடைக்க வேளுக்குடிக்கே மீண்டும் சென்று கேட்டு வந்தேன்.

8. “வீட்டுத்திண்ணைகளிலும் உள்முற்றங்களிலும் பெண்கள் திரண்டனர். பட்டுத்துணி அசையும் ஒலியில் அவர்கள் பேசிக்கொண்ட ஒலி திரண்டு புதர்க்காட்டில் காற்று செல்வதுபோன்ற ஓசையாக நகர்மீது பரவியது. அந்நகரில் ஒவ்வொருவரும் அஞ்சிக்கொண்டும் ஐயுற்றுக்கொண்டும் இருந்தனர்.

ஏன் ஆண்கள் வம்பு பேச மாட்டார்களா? பெண்கள் மட்டும்தான் வதந்தி பரப்புவார்களா?

9. தொலைக்காட்சியில் சத்தியவதியை கவர்ச்சியாகப் பார்த்து பார்த்து, அவளின் இளமையை வர்ணிக்காததை இப்போதைக்கு ஜீரணிக்க முடியாததால் மன்னிப்பே கிடையாது.

சுட்டிகள்:

அ) நூல் ஒன்று – முதற்கனல் – 6: பகுதி இரண்டு : பொற்கதவம்

ஆ) நூல் ஒன்று – முதற்கனல் – 5 : பகுதி ஒன்று : வேள்விமுகம்

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 4

In Mahabharat on ஜனவரி 4, 2014 at 5:59 பிப

முந்தைய பகுதி

1. ”புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார். தன்னை அறிந்துகொள்ளமுடியாதவனின் தனிமையை தெய்வங்களும் நீக்கமுடியாதென்று உணர்ந்தார்.

2. சின்னக் குழந்தையாக செய்த தவறுகளை கண்டும் காணாமல் இருப்பதற்காக ஆணி மாண்டவ்யர் கதை வரப் போகிறதோ என அந்த யாகம் செய்வதற்கான முஸ்தீபுகள் தோன்றவைத்தன.

3. கிறித்துவத்தில் “பாவ மன்னிப்பு” இருக்கிறது. இந்து மதத்தில் பரிகாரம் இருந்தாலும் முழு விமோசனம் கிடைப்பதில்லை. சாபம் பெற்றாலோ, ஒரு சின்ன தவறு இழைத்தாலோ நிச்சயம் நரகத்தில் உழல்வீர்கள். அறியாத வயதில் என்றாலும் விதிவிலக்கு கிடையாது. செய்த தவறை நினைத்து உழன்றாலும் தப்பிக்க முடியாது. ஒரு முறை ஜெயிலுக்குச் சென்றால், அதன் பிறகு எப்பொழுதும் திருட்டுப் பட்டம் தொடர்வது போல், என்றென்றும் அந்த அழுக்கு உங்களைப் பின் தொடரும்.

4. முழு மஹாபாரதம் பதிவு நடத்தும் அருளின் எண்ணங்கள்

5. ” கண்ணீர்த்துளிகள்போல, குருதித்திவலைகள் போல, விந்துச்சொட்டுகள் போல அவை நெருப்பில் விழுந்தபோது அரங்கெங்கும் நெடுமூச்சுகள் எழுந்தன.”

6. வீடு வாங்கினால் ஹோமம்; கல்யாணத்திற்கு ஹோமம்; கருவுற்றால் ஹோமம்; குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஆயுஷ்ய ஹோமம்; காலன் நெருங்காமல் இருக்க மிருத்யுஞ்சய ஹோமம் என்று வாழ்நாள் முழுக்க யாகமும் ஆகுதியும் தானமும் அதன் தாத்பர்யங்களும் பார்த்தவர்களுக்குக் கூட இந்தப் பகுதி எழுச்சியும் புது தரிசனங்களும் தருமாறு அமைந்திருக்கின்றன. ஏன் யாகம் செய்கிறோம்? எதை அதில் போட வேண்டும்? எப்படி இட வேண்டும்? வேதமந்திரங்களின் அர்த்தம் புத்திக்கு உறைக்கலாம்.

7. மகாபாரதம் – சொற்கள்

8. ”அத்தனை பாம்புகளும் வேள்விநெருப்பில் மறைந்ததும் அப்பகுதியெங்கும் எரிதலற்ற ஒளி நிறைந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஓவியப்பரப்பு போல அவர்களனைவரும் ஒன்றாகிவிட்டதாக உணர்ந்தனர்.”

9. அந்தக் காலத்தில் இருந்தே மேலாளர்கள் திருப்தி பெறாத, வேண்டுவதைக் கொணரும் வரை அடங்கா வேட்கையுடன் செயல்பட்டதை அறியமுடிகிறது 🙂 தனக்குத் தேவையான மிக மிக இறுதியான முக்கிய டெலிவரி வராவிட்டால், பிராஜெக்ட் மேனேஜர் ஆக முடியாது!

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 4

ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 3

In Mahabharat on ஜனவரி 4, 2014 at 1:24 முப

முந்தைய பகுதி

1. ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க ஆட்டம்; சில சமயம் ஆடு புலி ஆட்டம்; சில சமயம் பரமபதம். சாண் ஏறி, முழம் சறுக்கி ஓடுகிறோம்.

2. பண்டைய ஆக்கங்கள் முழுக்கவே ஆச்சாரியர்களை முன்னிறுத்துபவை. துர்வாசரைப் பகைத்துக் கொண்டால் சாபம்; விசுவாமித்த்ரருக்கு சிசுருஷை ஒழுங்காக செய்யாவிட்டால் ஜென்ம நாசம். துரோணரும் கூட ஏகலைவனைப் பார்த்துக் கொண்டார்; பரசுராமரும் கர்ணனை கவனித்தார். இந்தப் பகுதியிலும் குருமார்களிடம் சிரத்தையாக நடந்து கொள்ளாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை முன்வைக்கிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், முன்கோபத்தோடும் ஆவணத்தோடும், எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்னும் மமதையோடு இயங்கும் பெரியோர்களை கடுமையான விமர்சனப் பார்வை பார்த்தாலோ இளமையின் துள்ளலில் அந்த முனிசிரேஷ்டர்களை மனிதர்களாக தரையில் உலாவும் படைப்புகளாக உருவாக்கினாலோ, அதை நான் புனைவாக ஏற்றுக் கொள்வேன்.

3. இளமையில் விதவை ஆவதன் வலிகளை சுருக்கமாக உத்தரை மூலம் கோடிட்டு காண்பிக்கிறார். இந்த மாதிரி தற்காலப் பிரச்சினைகளை அந்தக் கால கதைகளில் விவரமாக உணர்ச்சிபூர்வமாக சொல்வது, வரலாற்றை மறுபார்வை பார்ப்பது போல், மாற்று கோணங்களை உணரவைப்பது போல் மிக முக்கியமானது. இங்கே ஜெயமோகன் வெறும் matter of fact ஆக தற்போதைக்குக் கடந்து போய் விடுகிறார்.

4. ஆனால், போரின் அர்த்தமின்மைக்கும் அதன் விளைவுகளின் நீதிக்கும் இந்தப் பகுதி ஓரளவு திருப்தியாகப் பேசுகிறது.

“குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம்.”

அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை.

5. மகாபாரதம் துளிக் கூட தெரியாதவர்கள் இந்தியாவில்… தமிழகத்தில்… இணையம் வாசிப்பவர்களில் வெகு வெகுக் குறைவாகவே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நடையும் எழுத்தும் கதாபாத்திரங்களும் பிரச்சினையே இல்லை. இந்தப் பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் எப்படி எடுபடும்?

6. மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்: தமிழ் ஹிந்து

7. அந்தக் காலத்திலேயே விமானம் ஓட்டினோம், கூடு விட்டு கூடு பாய்ந்தோம், அறுவை சிகிச்சை செய்தோம், செல்பேசியில் கதைத்தோம், சோதனைக்குழாயில் பிள்ளை உண்டாக்கினோம், நினைத்த மாத்திரத்தில் நேரப்பயணம் செய்தோம்… என்னும் பட்டியலில், முன்கூட்டியே பிறந்த சிசுவைக் காக்கும் வகையையும் அறிந்திருந்தோம் என நீட்டிக்கலாம்.

8. இருபதாண்டு காலம் திட்டமிட்டார் என ஒரிரு வார்த்தைகளில் கடந்து செல்கிறார். வானம் பொய்த்ததில் வரி வசூல் செய்வதில் பற்றாக்குறையா? மூலகர்த்தாவான xyzம் abcம் விந்திய மலை தாண்டி வரும்போது ஏதாவது ஹோமக்காரர்களுக்குத் தட்டுப்பாடா? நெய் காய்ச்சும்போது நேரம் எடுத்ததில் மாட்டுக்காரிக்கும் கிண்டுபவனுக்கும் குழந்தை பிறந்ததா? இப்படி எல்லாம் பின்புலமும் காரண காரியங்களும் சொல்லாவிட்டாமல், என் நினைவிலும் ஓரிரு நிமிடங்களே தங்கிப் போகும் அனுபவம் ஆகிவிடுகிறது.

9. மன்னர்களுக்கு அலுப்பு தட்டும் வேலை. எதிரிகள் இல்லாமல் தங்கள் பராக்கிரமத்தை எப்படி நிரூபிப்பது? முற்றுகை இடுவோரோ, பிரச்சினை எழுப்புவோரோ உருவாகாவிட்டாமல், தங்கள் வாழ்வின் அர்த்தம் என்ன? இதில் முன்னோர்கள் சொன்ன கதைகளும், சொல்லாமல் விட்டதை வதந்தியாகக் கேள்விபட்டதும் கலந்துருவாகும் நிஜம் என்ன? மது அருந்திய பின்னிரவுகளில் கற்பனை கலந்து கொப்புளிக்கும் கனவுகள் எவ்வாறு இருக்கும்? படியுங்கள் தெரியும் என காண்பிக்கிறார் ஜெயமோகன்.

சுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 3

Jeyamohan: Best Tamil Kavidhai Collections: Notable Poems & Poet Books

In Books, Literature on செப்ரெம்பர் 1, 2009 at 5:50 பிப

Source: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)

கவிதைகள்

1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]

[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]

2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]

[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]

3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]

[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]

5]  மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி

[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]

6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]

[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]

8]  முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]

[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]

9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]

[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]

10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்

[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]

கன்னியாகுமரி – ஜெயமோகன்

In Books on ஓகஸ்ட் 28, 2009 at 3:48 முப

நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்:

  1. அவனது முதிரா இளமைக் கனவுகளில் பளிங்கு நிறமுள்ள, உருண்டு பெருகி ஒன்றோடொன்று நெருங்கி நிறைந்த பெரும் மார்பகங்கள் நிரம்பியிருந்தன. அவை இருதசை குமிழ்களன்றி வேறல்ல என்ற உண்மையை அவன் கற்பனை ஏற்க மறுத்தது.
  2. kanniyakumariசானலை மாற்றி மாற்றிச் சென்று ஃபாஷன் டிவியை அடைந்தான். தொலைக்காட்சித் திரையின் வெண்திரவ ஆழத்திலிருந்து வண்ணக்குமிழிகள் போலப் பெண்ணுருவங்கள் எழுந்து வந்து வெடித்தபடியே இருந்தன.
  3. நாராயணன் பேசாத நேரங்களில் தூங்கிக் கொண்டிருப்பார். ஒருமுறை வேடிக்கை பேச்சினூடாக பார்கவிச்சேச்சி “நானும் பார்த்திருக்கேன். அந்த சமயத்திலும் பேசிகிட்டிருக்கிற ஒரே ஆள் இவர்தான்”
  4. கோபக்கார புருஷனுக்கு சமையல் பண்ற பொண்டாட்டியோட மனநிலை
  5. ரொம்ப அந்தரங்கமான விஷயத்த வெளியே சொல்றப்ப எப்பவுமே ஒரு செயற்கைத் தன்மை வந்துடும்.
  6. விசித்திரமான ஓர் ஒலி கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான். பலநூறு பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போன்ற ஒலி எதிர்ப்பக்க முட்கம்பி வேலியிலிருந்து கேட்டது. நெருங்கி உற்றுப் பார்த்தான். வேலியெங்கும் பாலிதீன் உறைக்கிழிசல்கள் காற்றில் வந்து சிக்கியிருந்து அதிர்ந்து படபடத்துக் கொண்டிருந்தன.
  7. அப்போதுதான் கொள்ளையடித்த கிராமத்துவீடு போலிருந்தாள் ஷைலஜா. எங்கே தொட்டாலும் பவுடரோ கிரீமோ கண்மையோ ஒட்டியது.
  8. அந்தச் செயல் போல அவனை இம்சை செய்வது வேறு ஏதுமில்லை.கல்லறை மீது பூக்களையும் சொற்களையும் வைப்பது போல.
  9. பெரிய அவமானம்னு ஒரு பிராயத்தில தோண்றது பிறகு ரொம்ப சாதாரணமா ஆகிடும். போய்ப் பேசுங்க. அவங்க சிரிப்பாங்க
  10. நடிப்புக்காகவென்றாலும் – கூட வருவதன் மூலம் உருவாகும் நிறைவு அது என்று புரிந்து கொண்டான். நம்பிக்கையூட்டக் கூடிய வலுவான ஆளுமை ஒன்றின் துணையைப் பெற்றுக் கொண்ட உணர்வா அது?
  11. அவள் மயிர்ச்சுருள்கள் ஆடின. பிணத்தின் மயிர்கள் காற்றிலாடுவது போல.
  12. சேற்றுப் பாதையில் இதமான வெப்பம் இருந்தது. தன் உடல் அச்சுவர்களில் உரசிய போதுதான் அவை வியர்த்த ஈரச் சருமப் பரப்புகள் என்று தெரிந்தது. நிர்வாணமான பெண்ணுடல்களினாலான சுவர். மென்முலைகள், வயிறுகள், தொடைகள்…
  13. சன்னலோரம் சென்று நின்று கடலைப் பார்த்தான். இருட்டில் மிதக்கும் படகு விளக்குகளே கடலாக மனதில் விரிந்து கொண்ட விந்தையை எண்ணிக் கொண்டான்.
  14. அவள் நடந்துபோய் சரக்கொன்றை மரத்தின் அடியில் அமர்ந்தாள். செம்மஞ்சள் மலர்கள் பூத்து நிரம்பிய, முதலைத் தோல் கொண்ட மரம்.
  15. ஒரு குறிப்பிட்டத் தோற்றத்தில் காட்சியளிக்க ஆரம்பித்தால் அதை நம்பும் பிறர் அத்தோற்றத்தை தன்மீது பதியவைத்து பிறகு அதிலிருந்து நினைத்தாலும் தப்ப முடியாத நிலையை உருவாக்கி விடுவார்கள் என்று அறிந்தான்.
  16. பெண் விரோதிகளில் ஒரு கணிசமான பங்கினர் மிகத் தீவிரமான பெண்பித்தர்கள்.
  17. எல்லா ஒழுக்கவிதிகளும் மத்தவங்களை சுரண்டக்கூடாதுங்கிற நீதியோட அடிப்படையில் உருவான விஷயங்கள்தான்னு எனக்குப் படுது. மத்தவங்களைப் பொருள் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ ஏமாற்றாம இருந்தா எல்லாமே ஒழுக்கம்தான்
  18. மானுடக் கற்பனையின் அதிகபட்ச எல்லை மனக்கனவுகளில் உலவுகையில்தான் தெரிகிறது. அல்லது அது அகங்காரத்தின் எல்லையா? மனிதனுக்குத்தான் எத்தனை குறைவாகத் தேவைப்படுகிறது வாழ்க்கை! அகங்கார சமனத்தின் சில கணங்கள். அதை முடிவற்ற கண்ணாடிப் பரப்புகளில் பிரதிபலித்துப் பிரதிபலித்து பிரம்மாண்டமான வெளியாக மாற்றிக் கொள்கிறான்.
  19. பெண் என்றால் உடம்பு மட்டுமல்ல; தன்னிலையும் அகங்காரமும் கூட. அதை உடலால் தொட முடியாது. அதை அகங்காரத்தால் மட்டும்தான் தொட முடியும்.

9 more Meet the Author Jeyamohan Events: Listings

In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப

Writer-Jeyamogan-Tamilஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு

  1. Los AngelesAug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
  2. St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
  3. Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
  4. Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
  5. Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
  6. Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
  7. Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
  8. Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
  9. Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM

Please contact the organizers to know the exact date, time and venue of the meetings