பரதேசி திரைப்படம் எடுத்த இயக்குநர் பாலா, இப்படி செய்திருக்க வேண்டும், அப்படி உருவாக்கியிருக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளும் ஆலோசனைகளும் இணையத்தில் வெளியாகிறது. நானும் உள்ளேன் அய்யா…
இடைவேளைக்குப் பிந்திய இரண்டாவது பகுதியில் குத்தாட்டம் இல்லாதது மிகப் பெரிய குறை. ’காளை’ படத்தில் குட்டிப் பிசாசே என்று குத்தாட்டம் போட்ட மாதிரி அதர்வா கதாபாத்திரத்தின் கற்பனையோடு வேதிகாவின் கிளப் டான்ஸ் வைத்திருக்க வேண்டும்.
தன்னுடைய நிறுவனத்திற்கு ‘B Studios’ என்று ஆங்கிலத்தில் வைத்ததற்கு பதிலாக ‘பா கலைக்கூடம்’ என தமிழ்ப்பறோடு பெயர் சூட்டியிருக்க வேண்டும்.
இரு பெண்களுக்கு நடுவில் சண்டை வருவது போல் காட்சி அமைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதுவும் தேய்வழக்காக மணப்பெண்ணின் அம்மாவிற்கும் மாப்பிள்ளையின் பாட்டிக்கும் பிணக்கு வருமாறு அமைத்திருப்பதற்கு பதில் ஆங்கிலேயரை அடித்துத் துவைப்பது போல் காட்சி வைத்து, பார்வையாளருக்கு திருப்தி கொடுத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் 1939ல் ரொட்டி இருந்திருக்க வாய்ப்பேயில்லை. பொறையும் பன்னும் மட்டுமே கிடைக்கும் நாயர் கடை அமைத்திருக்க வேண்டும்.
தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோயின் சர்வ சகஜம். அது போல் தன்ஷிகாவையும் அதர்வா உடன் சேர்த்து நினைக்க வைத்திருக்க வேண்டும்.
படத்தின் துவக்கத்தில் டைட்டில் வருகிறது. இப்பொழுதெல்லாம் சடாரென்று படத்தை ஆரம்பிப்பதுதானே வழக்கம்?! கட்டாங்கடைசியில் மட்டுமே தலைப்பும் இன்ன பிற எழுத்துகளும் வந்திருக்க வேண்டும்.
முன் பின்னாக காட்சியைக் கலைத்துப் போட்டு திரைக்கதை பின்னுவது இன்றைய சினிமா ஃபேஷன். அதன்படி, கொஞ்சம் தேயிலைத் தோட்டம், கொஞ்சம் மூங்கில் தோட்டம், கொஞ்சம் மாந்தோப்பு எல்லாம் அறுவடை செய்திருக்க வேண்டும்.
தேயிலையை விட காபி இன்னும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. காபியை விட புகையிலை இன்னும் நோய் தரக் கூடியது. புகையிலையை விட கஞ்சா இன்னும் அடிமையாக்கி அழிக்கும் ஆபத்து நிறைந்தது. எனவே, அவற்றின் அட்டை போல் உறிஞ்சும் தன்மைகளைத்தான் திரைக்கதை ஆக்கியிருக்க வேண்டும்.
ஓட்டுச் சுவடிகளில் எழுத்தே தெரியாமல் காட்சியாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செழியன். அந்தக் கால எழுத்தாணிகளைக் கொண்டு ஓலைச்சுவடி எழுத்துகளைத் தெளிவாக திரையில் காண்பித்திருக்க வேண்டும்.
இந்தியில் ஷாரூக் கான் நடித்த படமான ‘பர்தேஸ்’ படம் என்று தமிழரை ஏமாற்றும் விதமான தலைப்பை மாற்ற வேண்டும்.
தற்போதைய உச்சகாட்சி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், இதை வைத்து மாற்றியமைத்து, அரங்கிற்கு மீண்டும் பார்வையாளர்களை அழைக்கலாம் என்பது சாதாரணமாக சினிமா இயக்குநர்கள் செய்வதுதான்.
அந்த இன்னொரு க்ளைமாக்ஸ் என்ன? அப்படி என்னதான் டைரக்டர் பாலா யோசித்திருந்தார்?? எதை எழுத்தாளர் ஜெயமோகன் மாற்று முடிவாக கதைக்கு எழுதிக் கொடுத்தார்???
அம்சவள்ளியில் இந்த நிலைக்கு பழநி முழு முதற்காரணம். தொடர்வண்டியில் கண்டுபிடித்து, காவல்நிலையத்தில் வாங்கி, பிச்சைக்கு தயார் செய்தது அவரே. (தாண்டவனுக்கு பதிலாக) பழனியை ருத்ரன் சாகடிக்கிறார்.
துவக்கத்தில் இருந்து பூஜாவின் எந்தக் கோரிக்கைக்கும் எந்தக் கடவுளும் செவிசாய்க்கவில்லை. தொலைநோக்குப் பார்வையற்ற ஆர்யாவின் மதியில்லாத செயலினால், ஆர்யாவின் அம்மாவுக்காக பரிந்து பேசியதைப் போல் விளக்கிச் சொல்லாமல் தடாலடியாகத் தீர்த்துக் கட்டியதால், அழகும் குலைந்ததால், அம்சவள்ளி நான் கடவுள் ஆகிறாள். ருத்ரனுக்கு ‘வர்தான்’ தருகிறார்.
மலையாளத்தில் எழுதினால் இந்நேரம் ஜெயமோகனுக்கு சாகித்ய அகாதெமியும், கேரளாவினால் பாலாவிற்கு தேசிய கவனிப்பும் கிடைத்திருக்கும். எனவே, இதெல்லாம் மலையாள சேட்டனின் சூழ்ச்சி. முல்லைப் பெரியாறு போல் மொத்தமாக உருப்படிகளை அபகரிக்கும் திட்டத்திற்கு திராவிட தாண்டவன் பலியாகிறார்.
தி டெவில்ஸ் அட்வகேட்: தாண்டவன் கடைசியில் உண்மையை சொல்கிறார். அவர்தான் ஆரியாவின் உண்மையான தந்தை. அவர் பிறிதொரு பிச்சைக்காரியுடன் உறவுகொண்டதில் பிறந்தவள் பூஜா. அமசவள்ளியும் மகள். இருவரையும் இணையச் சொல்கிறார்.
தாண்டவன் பதுக்கி வைத்திருந்த அஞ்சு பைசா, பத்து பைசாக்கள் வெளிவருகிறது. இந்தியாவில் நிலவும் சில்லறைப் பஞ்சம் குறைகிறது. பணப்புழக்கம் ஏறுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
ருத்ரன் பாகிஸ்தானில் வந்திருக்கும் தீவிரவாதி. வாரநாசி குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ருத்ரன் என்பதை தமிழகக் காவல்துறை துப்புதுலக்குகிறது.
தாண்டவன் அழிந்தபின்பும் பகவான் காலபைரவருக்கு குடும்ப பந்தம் விலகவில்லை. ‘தசாவதார’ கோவிந்தும் ‘நான் கடவுள்’ ருத்ரனும் சந்திக்கும் தருணத்தில் சுனாமி நிகழ்கிறது. ருத்ரனுக்கு சரியான வேட்டை. இறுதியில் கமலும், பதினொன்றாவது கமல்ஹாசனாக இயக்குனர் பாலாவும் ‘யார் கடவுள்? நானே கடவுள்?’ என்று சண்டையிடுகின்றனர்.
லகான் கடி குழு: தாண்டவன் ‘ஒண்டிக்கு ஒண்டி’ பதில், குழுப் போட்டிக்கு அழைக்கிறான். அவனுடைய டீமில் இருந்து பதினொன்று விளிம்புநிலையாளர்களும், ருத்ரனின் அகோரிக்கள் பதினோரு பேரும் இடையே கடிப் போட்டி. தாண்டவனின் கடி ஜோக்குகளுக்கு அகோரி சாமியார்கள் சிரித்துவிட்டால், காசி பிஷுக்கள் பிச்சையெடுக்க வந்துவிட வேண்டும். இல்லையென்றால், அகோரிக்களுக்கு உணவாகி விடுவார்கள்.
கட்டாங்கடைசியாக — இடைவேளைக்கு அப்புறம் எவரும் திரையரங்கில் இருக்க மாட்டார். எனவே, அங்கேயே ‘தி என்ட்’ போட்டுடலாம் என்றிருப்பார் பாலா.